ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடி நடித்த சூர்யகாந்தி... டிஜிட்டலில் வெளியாகிறது!
இன்றைய தமிழக முதல்வர் சொந்தக் குரலில் பாடி நடித்த சூர்யகாந்தி திரைப்படம், 43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டலில் வெளியாகிறது.
ஜெயலலிதா - முத்துராமன் நடித்து 1973 ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் சூரியகாந்தி. 150 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படத்தை தற்போது நவீன வடிவமாக டிஜிட்டல் மற்றும் சினிமாஸ் கோப்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

43 வருடங்களை கடந்து 44 ம் வருடத்தை தொட்டிருக்கும் சூரியகாந்தியின் கதைக்களம் எந்த கால கட்டத்திற்கும் பொருத்தமானதாக இருப்பதால் இந்த தலை முறையினரும் ரசிக்க கூடிய படமாக இருக்கும் என்பதால், மீண்டும் வெளியிடுவதாக படத்தின் இயக்குநர் முக்தா வி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தன்னை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிற தாழ்வு மனப்பாண்மை பிடித்து ஆட்டும் கணவனின் ஈகோதான் கதைக் களம். சோ, மனோரமா, மௌலி, காத்தாடி ராமமூர்த்தி, எம்ஆர்ஆர் வாசு போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில்இரண்டு பாடல்களை சொந்தக் குரலில் பாடி இருந்தார் ஜெயலலிதா. 'ஓ மேரோ தில்ரூபா....', 'நானென்றால் அது நீயும் நானும்...' ஆகிய அந்த இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தவை.

இந்தப் படத்தில் இடம்பெற்ற காவியப் பாடல் 'பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது...'. இந்தப் பாடலை எழுதிய கவியரசர் கண்ணதாசனே, படத்தில் மேடையில் தோன்றிப் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல் இது. இன்று பல கோடி பேர் தினமும் கேட்டு மனதை ஆற்றுப்படுத்திக் கொள்ளும் பாடல். இசை: மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன்.

பாடல்களுக்காகவும், படத்தின் கதைக்காகவும், சிறப்பான நடிப்பு, மற்றும் இசை என்று எல்லோராலும் பாராட்டு பெற்ற சூரியகாந்தி படத்தின் நூறுறாவது நாள் வெற்றிவிழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதே விழாவில்தான் ஜெயலலிதாவுக்கு தந்தை பெரியார் பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த படத்தின் கதை, வசனத்தை ஏ எஸ் பிரகாசம் எழுதி இருந்தார். வித்யா பிலிம்ஸ் வேணுகோபால் தயாரித்த சூர்யகாந்தியை முக்தா வி.சீனிவாசன் இயக்கி இருந்தார்.


Click it and Unblock the Notifications











