கதை திரைக்கதை வசனம் இயக்கம்: சிஷ்யன் பார்த்திபனுக்கு குரு பாக்யராஜ் பாராட்டு!
சென்னை: கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் மீண்டும் புத்தம் புதிய பாதையில் வெற்றிநடைபோடுகிறாய் என தன் சிஷ்யன் பார்த்திபனை வாழ்த்தியுள்ளார் குரு பாக்யராஜ்.
பார்த்திபன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. இப்படம் பல்வேறு தரப்பினரிடேயே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

வாழ்த்துக் கடிதம்
இந்நிலையில், பார்த்திபனின் குருவான இயக்குனர் பாக்யராஜ் இப்படத்தை பார்த்துவிட்டு, தனது சிஷ்யனான பார்த்திபனுக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

புத்தம் புதிய பாதை
புதிய பாதையில் தொடங்கி, பயணத்தின் ஊடே நீ சற்று தூரமும், சற்று நேரமும் கரடுமுரடான கற்பரப்பினைக் கடக்க வேண்டி இருந்தது. இதை நானும் அனுபவித்தவனே! ஆனால் நீ மாற்றுப்பாதை தேடாமல் விடாமுயற்சியுடன் கடந்து, தற்போது ஒரு புத்தம் புதிய பாதையினைக் கண்டு, அதில் காலடி எடுத்து வைத்துவிட்டாய்.

ட்ரெண்டை மாத்திட்டாய்
ஆம்! உனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தினை பார்த்தபோதுதான் இதை உணர்ந்து மகிழ முடிந்தது. இப்போது சினிமாவின் ட்ரெண்ட் மாறிவிட்டது எனப் பலரும் கூறுவதுண்டு. அந்த ட்ரெண்டை நீ மாற்றிவிட்டாய்.

லேட்டஸ்டிலும் லேட்டஸ்ட்
இப்போதைய இளைஞர்கள், லேட்டஸ்ட் டெக்னிக்கில் படம் எடுக்கிறார்கள் என்று சொல்பவர்கள், உனது படம் பார்த்ததும், லேட்டஸ்ட்டிலும் லேட்டஸ்ட் இது என்று ஒப்புக் கொள்வார்கள். உன் டெக்னிக்கை பார்த்து நான் பொறாமைப்பட்டேன் என்பது நிதர்சனமான உண்மை.

நான் கொஞ்சம் சோம்பேறி..
நான் கதை சொல்பவன். அதை மிக நேர்த்தியாகவும் சொல்பவன்தான். ஆனால் அலங்காரமாக சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்ளமாட்டேன். (அதில் நான் சற்று சோம்பேறி). உனது இந்த படத்தில் நீ, உன்னையும் தாண்டி அழகாக செய்திருக்... செதுக்கியிருக்கிறாய்.

உழைப்பு
நீ படைத்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையும், பேசும் இயல்பும் உனது கடின உழைப்பையும், கவனத்தையும், கடின உழைப்பையும் பறைசாற்றுகிறது. நீ தேர்ந்தெடுத்த கூட்டமும், உனது கூட்டாளிகளும் இணைந்து அதற்கு உயிர்கொடுத்துள்ளனர்.

மூளை எடையும் கூடுது
உனது எடை அவ்வப்போது கூடும். கூடவே உன் மூளையின் எடையும் கூடி வந்துள்ளதை இப்போது உணர்ந்து என்னுள் அப்படி ஒரு பூரிப்பு (இறுமாப்பு). தியேட்டரில் எழுந்த ஒவ்வொரு கைதட்டலும் உன்னைத் தாண்டி என்னிடம் வந்து சேர்ந்தது. இதயம் குளிர அள்ளிக் கொண்டேன்.

என் குருவின் வயதிலும்
என் குரு 74 வயதிலும் தெம்புடன் பூஜை போட்டுக் கொண்டுள்ளார். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கான உனது இதே கவனமும், பொறுப்புடம், உழைப்பும் தொடருமானால்... தொடரும்... நீ என் குருவின் வயதில் வெற்றி விழாக்களில் உலா வருவாய் என நம்பிக்கையுடன் வாழ்த்தி என்னால்... இல்லை. இல்லை... தன்னாலே உயர்ந்த சிஷ்யனுக்கு வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











