செங்கல்பட்டு ஏரியாவில் தெறி படம் ரிலீஸாகாதது ஏன்?.. கலைப்புலி தாணு பரபரப்புப் புகார்
சென்னை: செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தனது இல்லத் திருமணத்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை அழைத்திருந்தார். இருவரும் வரவில்லை. இந்தக் கோபத்தில்தான் தற்போது தெறி படத்தை தனது கட்டுப்பாட்டில் உள்ள செங்கை பகுதி தியேட்டர்களில் வெளியிட விடாமல் தடுத்து விட்டார் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், தெறி படத் தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தெறி படம் அனைத்துப் பகுதிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு பகுதியில் உள்ள தியேட்டர்களில் மட்டுமே அது வெளியாகவில்லை. இதற்குக் காரணம் செங்கைப் பகுதி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம்தான்.

ஒரு ரவுடி போல செயல்படுகிறார் பன்னீர் செல்வம். இவர் தனது வீட்டுத் திருமணத்திற்கு ரஜினிகாந்த், விஜய் ஆகியோரை அழைத்திருந்தார். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர் நான் யார் என்று அவர்களுக்குக் காட்டுகிறேன் என்று கூறி சவால் விட்டுள்ளார். அதனால்தான் இப்போது தெறி படத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார். இதேபோல கபாலி படத்தையும் தடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
இவரது அல்பப் புத்தியால் இப்போது செங்கல்பட்டு பகுதி தியேட்டர்களில் மட்டும் தெறி ரிலீஸாகவில்லை. இதுபோல எங்காவது கேள்விப்பட்டுள்ளீர்களா? ராமானுஜம் (முன்னாள் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர்) போன்ற மேதைகள் இருந்த இடத்தில் இப்படிப்பட்ட ரவுடித்தனம் செய்வோர் வந்து உட்கார்ந்துள்ளனர்.
தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால் பன்னீர் செல்வம் லஞ்சமும் கேட்கிறார். கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கிறார். தயாரிப்பாளர்களை, விநியோகஸ்தர்களை மிரட்டுகிறார் என்று கூறினார் தாணு.


Click it and Unblock the Notifications











