உத்தம கலைஞன்... உலக நாயகன்... சர்வதேச அரங்கில் கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த கமல்ஹாசன்
சென்னை: தமிழ்த் திரையுலகின் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
கமலின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சர்வதேச அரங்கில் தன்னிரகற்ற கலைஞனாக தமிழ் சினிமாவின் பெருமையாக கடந்த 69 ஆண்டுகளாக ஜொலித்து வருகிறார் கமல்.

ஆறிலிருந்து அறுபது வரை
பால் வடியும் முகத்துடன் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் சிறுவன், 68 வயதில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாக வலம் வருவார் என யாரும் நினைத்திருப்பார்களா?. அப்படி அப்போது யாரும் நினைத்திருந்தாலும் கூட அவர்கள் மனக் கணக்கையும் விஞ்சிய உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள ஒருவர் தான் கமல்ஹாசன். அதிர்ஷ்டத்தையோ அல்லது செல்வாக்கையோ பயன்படுத்தி கமல்ஹாசன் இந்த இடத்தை அடையவில்லை. கமல் அடியெடுத்து வைத்த அத்தனை பாதைகளிலும் மிதமிஞ்சிய தேடலும் மின்னல் வேக ஓட்டமும் தான் அவருக்கு கைகொடுத்தது.

தேடல்கள் நிறைந்த தெய்வீகக் கலைஞன்
கமலுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும், அவரது தேடல்களிலும் அதன் விளைவுகளில் ஒரு தெய்வீகக் கலைஞன் நிரம்பியிருந்தான். பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற பெரும் படைப்பாளர்களின் முதிர்ச்சியை தாங்கிக் கொள்ளும் விளை நிலமாகவும், இளம் இயக்குநர்களின் புதிய தேடல்களுக்கு பெருவெள்ள பாசனமாகவும் கமல் தன்னை தயார்படுத்திக் கொண்டதே அவருக்கும் தமிழ்த் திரையுலகுக்கும் முதல் வெற்றியாக அமைந்தது. நடிப்பு, நடனம், கதை வடிவமைப்பு, திரைக்கதையை கையாளுதல், இயக்கம் இன்னும் என்னென்ன உண்டோ, அத்தனையும் கமலின் கைக்குள் வசப்பட்டன.

உலக நாயகன் தான்
சப்பாணியாக கண் கலங்க வைத்த கமலுக்கு சிவப்பு ரோஜாக்கள் சைக்கோ முத்துவாக மிரட்டவும் தெரிந்தது. அபூர்வ சகோதரர்களில் அப்புவாக பிரமிக்க வைத்தவர், நாயகன் படத்தில் யார் இந்த வேலு நாயக்கர் என நிமிர்ந்து பார்க்கவும் வைத்தார். புதிய களங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க ஒருபோதும் தயங்கியதே இல்லை. அதனால் தான் மைக்கேல் மதன காமராஜன், சத்யா, குணா, மஹாநதி, குருதிப் புனல், சதிலீலாவதி, தேவர் மகன், ஹேராம், ஆளவந்தான், அவ்வை சண்முகி, விருமாண்டி என கமலின் திரைப்படங்கள் எல்லாம் இங்கே புதிய பாய்ச்சலை நிகழ்த்தின.

தொடரட்டும் வெற்றிப் பயணம்
சினிமாவில் சம்பாதித்ததையெல்லாம் சினிமாவிலேயே கொட்டிவிட்டு கொட்டு முரசே கொட்டு என அரசியலுக்கு வந்த கமல், இப்போது மீண்டும் தனது வேங்கையாட்டத்தை விக்ரம் படத்திலிருந்து தொடங்கியுள்ளார். கமலின் ஆட்டம் முடிந்தது என ஊரார் பேசிய பேச்செல்லாம், பெருமழையில் நனைந்த அச்சு வெல்லமாய் கரைந்தே போனது. இப்போதும் இந்தியன் 2 படத்தில் விஸ்வரூப அவதாரம் எடுக்க அதே உத்வேகத்தில் களமாடிக் கொண்டிருக்கிறார் கமல். இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது, அதுவே நடக்கும் என நம்புவோமாக.


Click it and Unblock the Notifications











