'டுபாக்கூர் பாஸ்'... சமூக வலைத் தளங்களில் வறுபடும் 'உலக நாயகன்'!
கமல் ஹாஸனுக்கு சமூக வலைத் தளங்களில் எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் சொன்னால் கூட, வலைவாசிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
ஆனால் முதல் முறையாக அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர், குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக.
எதற்காக இந்த வசவுகள் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும்... பிக் பாஸ்.

ஏன்?
இந்த நிகழ்ச்சியை நடத்த கமலை தேர்வு செய்ததோ, அதற்காக அவருக்கு பல கோடிகள் கொட்டிக் கொடுக்கப்பட்டதோ இவர்களுக்குப் பிரச்சினையில்லை.
அந்த நிகழ்ச்சியை கமல் நடத்தும் விதம், அந்த சேனலின் படு மட்டமான, வக்கிரமான ஸ்க்ரிப்டை கமல் பணத்துக்காக ஒப்புக் கொண்டு நடத்திக் கொண்டிருப்பதை யாருமே ரசிக்கவில்லை.

சத்யமேவ ஜெயதே போல
'கமல் ஹாஸனுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. மிக அட்வான்ஸ் சிந்தனை கொண்ட மனிதர், கலைஞர். ஆனால் ஏன் இந்த குப்பை நிகழ்ச்சியை நடத்த வேண்டும்? ஆமிர் கான் சத்யமேவ ஜெயதே நடத்தியதைப் போன்ற ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியை அல்லவா நடத்தியிக்க வேண்டும்?' என்று விளாசுகிறார் ஒரு விமர்சகர்.

சதிக்கு உடந்தையாகிவிட்டாரே
இன்னொருவரின் கருத்து உண்மையில் சிந்திக்க வைப்பது. "மத்திய அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான அத்தனை விஷ(ய)ங்களையும் திணித்துக் கொண்டே உள்ளது. திராணியில்லாத மாநில அரசு அதை வேடிக்கைப் பார்க்கிறது. ஒவ்வொரு பிரச்சினை வெடிக்கும்போதும் பிக்பாஸ் போன்ற குப்பை நிகழ்ச்சிகளை பரபரப்பாக்கி மக்களை போதையிலேயே இருக்க வைக்கப் பார்க்கிறது.. அதற்கு கமல் துணை போய்விட்டாரே?"

இது டுபாக்கூர் பாஸ்
"இது பிக் பாஸ் அல்ல.. டுபாக்கூர் பாஸ். எல்லாம் எழுதி வைத்து அரங்கேற்றப்படும் நாடகம். போலி அழுகை, நீலிக் கண்ணீர். திட்டமிட்ட கலாட்டாக்கள், சமரசங்கள், வெளியேற்றங்கள். இதை கமலை வைத்து அரங்கேற்றுவதுதான் பெரிய மோசடி" - ஒரு பிரபலம் நம்மிடம் பகிர்ந்தது இது.

கமலுக்கு இது தேவையா?
"கமல் என்பவர் ஒரு லெஜன்ட். சகாப்தம். தன்னுடைய இந்த அந்தஸ்தை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அனுயா, ஜூலி, பரணி, இன்னும் திரையில் சரியாக கால்பதிக்காத நபர்களிடமில்லாம் மைக்கை நீட்டி கருத்துக் கேட்பது, ஒரு சாதாரண டிவி தொகுப்பாளர் மாதிரி பேட்டி காண்பதெல்லாம் ரொம்பவே நெருடலாக உள்ளது. இவருக்கு இது தேவையா?" - இப்படி ஒருவர் கேட்கிறார்.

வக்கிரத்துக்கு வக்காலத்தா?
நெடுவாசல், கதிராமங்கலத்தில் பெரும் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் சூழலில், முதல்வரே தன் சொந்த மக்களை எதிர்த்துக் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் மோசமான நிலையில், அந்தப் பிரச்சினைகளை பொது வெளியில் தீவிரமாகப் பேச வேண்டிய பிரபலங்கள் இப்படி பிக் பாஸ் போன்ற வக்கிரங்களுக்கு வக்காலத்து வாங்கலாமா? என்ற கேள்விகளைப் புறக்கணிக்க முடியாதே கமல் சார்!


Click it and Unblock the Notifications











