ஒரே நாளில் மூன்று புதிய படங்களைத் தொடங்கும் கமல் ஹாஸன்!
சென்னை: ஒரே நேரத்தில் மூன்று புதிய படங்களைத் தொடங்குகிறார் நடிகர் கமல் ஹாஸன்.
பாபநாசம் படத்துக்குப் பிறகு கமல் ஹாஸனின் படத் தயாரிப்பு முறையே மாறிவிட்டது. அதற்கு முன் அவர் பெரிய பட்ஜெட் படங்களைத்தான் தயாரித்து நடித்து வந்தார். ரூ 100 கோடி பட்ஜெட், அதிக நாள் படப்பிடிப்பு என்பதுதான் அவர் திட்டம்.

ஆனால் பாபநாசம் படத்தின் தயாரிப்பு முறை, கையடக்க பட்ஜெட், அதற்குக் கிடைத்த பெரிய வசூலைப் பார்த்த பிறகு தனது படத்தயாரிப்பு முறையையே மாற்றிக் கொண்டார் கமல். இதனை வெளிப்படையாக அறிவித்தவர், தனது அடுத்த படமான தூங்காவனத்தை சிக்கன பட்ஜெட்டில், குறுகிய நாட்களில் எடுத்து வெளியிட்டார்.
படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், கமல் கையைக் கடிக்கவில்லை.
இப்போது அடுத்து மூன்று படங்களுக்கு ஒரே நேரத்தில் பூஜை போடுகிறார். கமல் பார்வையில் இது பூஜை அல்ல.. தொடக்க விழா.
நடிகர் சங்க வளாகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இந்த விழா நடக்கிறது. இதுகுறித்த விளம்பரத்தில் 'மீண்டும் வருவது யாரெனத் தெரிகிறதா?' என்று குறிப்பிட்டு துப்பாக்கி ஏந்திய கமலின் நிழலுருவப் படம் வைத்துள்ளனர்.
மூன்று படங்களுக்கும் பொதுவாக இயக்குநர் டிகே ராஜீவ் குமார், இசை இளையராஜா, கதை திரைக்கதை கமல் ஹாஸன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படங்களை கமல் ஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.


Click it and Unblock the Notifications











