தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பிரமாண்ட ஸ்டுடியோ... தொடங்கி வைத்தார் கமல் ஹாஸன்!
கோடம்பாக்கத்திலிருந்த சினிமா ஸ்டுடியோக்கள் ஒவ்வொன்றாக அபார்ட்மெண்ட்கள், நட்சத்திர ஹோட்டல்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஏவிஎம் ஸ்டுடியோவுக்கே அந்த கதி வந்துவிட்டது.
இந்த நிலையில், சென்னை நகருக்கு வெளியே புதிய ஸ்டுடியோக்கள் உருவாகிக் கொண்டுள்ளன. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு ஸ்டியோ உருவாகி பெரிய படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

பூந்தமல்லியைத் தாண்டி ஈவிபி கார்டன் இப்போது முழு நேர ஸ்டுடியோவாகவே மாறிவிட்டது.
அடுத்து அதே பூந்தமல்லி அருகில் இன்னொரு பிரமாண்ட ஸ்டுடியோ உருவாகியுள்ளது. அதுதான் கோகுலம் நிறுவனத்தின் ஜி ஸ்டுடியோ.
வேலப்பன் சாவடியில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான ஸ்டுடியோவை நேற்று திறந்து வைத்தார் கமல்ஹாசன்.
இசைஞானி இளையராஜா குத்துவிளக்கு ஏற்ற, திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தினர்.
கோகுலம் குழுமத்தின் நிறுவனர் கோபாலனோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களை இந்த விழாவில் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.
'என் இல்லத்திற்கு பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம் ஸ்டுடியோக்கள்தான். தென் திரையுலகின் பெருமைக்குரிய பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டதை கேள்விப்பட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். திரையுலகிற்கு கோபாலன் செய்திருக்கும் இத்தகைய அர்ப்பணிப்பை 'தர்மா' என்று தான் நான் சொல்லுவேன்.
ஒரு காலத்தில் எப்படி ஆற்காடு சாலை, ஸ்டுடியோக்களின் அடையாளமாக திகழ்ந்ததோ, அது போல இந்த ஜி. ஸ்டூடியோ மூலம் விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் தமிழ் சினிமாவின் மையமாக திகழும் என நம்புகிறேன். வர்த்தகம் என்பதையும் தாண்டி சினிமா மீது தீவிர காதல் இருந்தால் மட்டும்தான் இத்தகைய பிரம்மாண்டமான ஸ்டுடியோவை திரையுலகிற்கு அர்ப்பணிக்க முடியும்," என்றார்.
நடிகர் சங்கத்தின் பொது செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் பேசும் போது, "தமிழ் திரையுலகிற்கு மேலும் பல நல்ல படங்களை கோகுலம் கோபாலன் வழங்க வேண்டும். சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் தலைச்சிறந்த ஸ்டூடியோ ஒன்று தற்போது நிறுவப்பட்டிருக்கிறது. இனி மற்றவர்களை விட நாங்கள் உள்கட்டமைப்பில் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பெருமையோடு சொல்லலாம்," என்றார்.


Click it and Unblock the Notifications











