விஸ்வரூபத்திற்கு மிரட்டல்: டிஜிபியிடம் கமல் புகார்-உள்துறைச் செயலாளருடனும் சந்திப்பு!

உலகத் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான ஒரு அதிரடி நடவடிக்கையில் கமல்ஹாசன் இறங்கியுள்ளார். யாருமே யோசித்திராத, செய்யத் துணியாத வகையில், தனது பிரமாண்டமான விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் முதலில் வெளியிட அவர் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளையும் செய்து முடித்து விட்டார்.
இதனால் இந்தியத் திரையுலகமே கமல்ஹாசனை ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி கலந்து பார்த்து வருகிறது. டிடிஎச்சில் தனது படம் வெளியாகப் போவதாக கூறியது முதலே கமல்ஹாசனுக்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள், ஆவேசங்கள், கோபங்கள், விமர்சனங்கள் பாய்ந்தவண்ணம் உள்ளன. ஆனால் கமல்ஹாசன் அதை நேர்த்தியாக சமாளித்து வருகிறார்.
கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் என பெருமளவிலான ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று திடீரென டிஜிபி அலுவலகம் வந்தார் கமல்ஹாசன். அங்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் டிடிஎச்சில் விஸ்வரூபம் படத்தைத் திரையிட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தைத் திரையிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கமல்ஹாசன் கோரியுள்ளார்.
மேலும் தலைமைச் செயலகம் சென்ற அவர் அங்கு தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரையும் சந்தித்து விளக்கம் அளித்தார்.


Click it and Unblock the Notifications











