Kantara Chapter 1 Collection - வசூலை வாரி குவிக்கும் காந்தாரா சாப்டர் 1.. 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் கடந்த இரண்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் பாகம் போலவே இந்தப் பாகமும் தங்களை திருப்திப்படுத்தும் என்ற எண்ணத்தில் சென்ற ரசிகர்களுக்கு நினைத்ததே நடந்தது. விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் அப்படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் நேற்று படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கன்னட திரையுலகத்தில் வரும் படங்கள் பெரும்பாலும் மற்ற மொழி திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தாமலேயே இருந்தன. அதுமட்டுமின்றி வேற்று மொழி திரைப்படங்கள் அங்கே அதிகம் ரீமேக் ஆகிக்கொண்டிருந்தன. இந்த நிலைமையை மாற்றி காட்டியது என்றால் கேஜிஎஃப் படமும் காந்தாரா படமும்தான். இந்த இரண்டு படங்களும்தான் கன்னட திரையுலகத்திலிருந்தும் பான் இந்தியா படம் வெளியாகும் என்பதை உணர்த்தியது.
காந்தாரா: இயக்குநர் மற்றும் நடிகர் என இரண்டு அவதாரங்களை கொண்டிருக்கும் ரிஷப் ஷெட்டி இயக்கிய படம்தான் காந்தாராம். இப்படமானது கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. ரொம்பவே குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் பல கோடி ரூபாய் வசூல் செய்தது. வசூல் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. மத்திய அமைச்சர்கள், சூப்பர் ரஜினிகாந்த், ரசிகர்கள் என அனைவரிடமும் படம் பாராட்டை பெற்றது.

காந்தாரா படத்தின் இரண்டாவது பாகம்: சூழல் இப்படி இருக்க அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு காந்தாரா படத்தின் இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தின் முன் கதையாக உருவாக்கினார் ரிஷப் ஷெட்டி. 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முதல் பாகம் போலவே இந்தப் பாகமும் மெகா ஹிட்டாக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார்கள் படக்குழுவினரும், ரசிகர்களும்.
மெகா ஹிட்: எதிர்பார்த்தபடியே படம் சூப்பர் டூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த இரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படத்தை ஆஹா ஓஹோவென்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். டெக்னிக்கலாகவும் சரி, கதை ரீதியாகவும் சரி பெரிய பாய்ச்சலை இயக்குநர் ரிஷப் ஷெட்டி செய்திருக்கிறார் என்றும், இதுபோன்று ஒரு படமாவது தமிழில் வராதா என்றும் படம் பார்த்த கோலிவுட் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
வசூல் வேட்டை: விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் இந்தப் படம் வசூல் ரீதியாகவும் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றுவருகிறது. அதாவது Sacnilk வெளியிட்டிருக்கும் தகவல்படி முதல் நாளில் 61 கோடி ரூபாயை இந்தியாவில் வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் சூப்பராகவே இருந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்று அந்தப் படம் இந்தியாவில் மட்டும் 31.25 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவில் மொத்தம் 256 கோடி ரூபாயையும், உலகம் முழுவதும் 335 கோடி ரூபாயையும் வசூலித்திருப்பதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











