அடுத்தடுத்து மூன்று மாதங்களில் நான்கு கதாபாத்திரங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றிகள் கொடுத்த கார்த்தி
சென்னை: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இணையதளம் முழுக்க இது சர்தார் தீபாவளி என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. எனவே நான்கு நாட்கள் விடுமுறையை இந்தப் படம் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கார்த்திக்கு இது ஹாட்ரிக் வெற்றி என்பதும் அதுவும் அடுத்தடுத்த மாதங்கள் இது நிகழ்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.மித்ரன்
தன்னுடைய முதல் படத்திலேயே அட்டகாசமான கதைக்களத்துடன் வெற்றியை கண்டார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். அந்தப் படம் பார்த்தவர்களுக்கு ஒரு விதமான அச்சத்தையே ஏற்படுத்தியது என்று சொல்லலாம். நடிகர் கார்த்தி கூட படம் பார்த்த முடித்த பின்னர் தனக்கு வங்கியிலிருந்து வந்த ஒரு குறுந்தகவலை பார்த்து நெஞ்சே அடைத்தது போல் இருந்ததாக சமீபத்தில் கூறியிருந்தார். அப்படிப்பட்ட இயக்குநர் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் தான் சர்தார்.

நடிகர்கள் பாராட்டு
இந்தப் படத்திலும் மித்ரன் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார் என்றே சொல்லலாம். அடிப்படையில் அவர் அதிகம் படிக்கக் கூடிய நபராம். எந்த ஒரு விசயம் பற்றி கேட்டாலும் அதில் மேம்போக்காக இல்லாமல் விரிவாக விளக்கம் அளிக்கக் கூடியவர் என்று நடிகர் கார்த்தியும் நடிகை ராசி கண்ணாவும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்கள். இரும்புத்திரை திரைப்படத்தின் இந்தி டப்பிங் யூடியூபில் மட்டுமே 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்படத்தக்கது. இப்போது சர்தார் திரைப்படத்திற்கு அந்த வரவேற்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

கைதி 2
அடுத்ததாக குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப் போகிறார். அதனை முடித்த பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நடிகர் விஜய்யின் படத்தை முடித்த பின்னர், இருவரும் சேர்ந்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகவும் 2023-ஆம் ஆண்டு அந்தப் படம் திரைக்கு வரும் என்றும் கார்த்தி கூறியிருக்கிறார்.

மூன்று மாதங்களில் ஹாட்ரிக்
இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என்று அடுத்தடுத்து மூன்று மாதங்களில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என மூன்று வெவ்வேறு கதைக்களங்களில் வெளியாகி மூன்றுமே ஹிட் ஆகியுள்ளது. எந்த ஒரு நடிகருக்கும் அமையும் அபூர்வமான நிகழ்வு இது. இந்தப் படங்களை தவிர்த்து இந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்திலும் அவரது குரல் மட்டும் இடம்பெற்றிருக்கும். பொன்னியின் செல்வன் படத்திற்காக முடி வளர்த்திருந்ததால் விஷுவலாக விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவில்லை எனவே டப்பிங் மட்டும் கொடுத்தேன் என்று கார்த்தி முன்னதாக கூறியிருந்தது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











