படைப்பு எண் 3 - திகில் மர்மங்கள் நிறைந்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
சென்னை: அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் எதிர்பாராத திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்த திகில் படமான படைப்பு எண் 3 என்ற படத்தின் நேற்று கொடைக்கானலில் இனிதே தொடங்கியது.
நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில், இவர் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் விரக்தியில் இருந்த கீர்த்தி சுரேஷுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது, மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் கதையான மகாநடி படத்தில் நடித்தது தான்.

இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது, மகாநடி படத்தில் நடித்ததற்காக கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது. இதன் பின்பு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்தாலும் கூட, அனைத்து பட வாய்ப்புகளையும் ஏற்கவில்லை.

நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் ஒரு படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் உடன் நடிக்கிறார்.
அதேபோல, தமிழில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கும் படைப்பு எண் 3 என்ற படத்தில் நடிக்கப்போகிறார். தற்போது திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளதால், இந்தப் படமும் எதிர்பாராத திருப்பங்களும் மர்மங்களும் நிறைந்த திகில் படமாக எடுக்கப்படுகிறது.
இப்படத்தை தயாரிக்கப்போவது மேயாத மான் மற்றும் மெர்குரி ஆகிய படங்களை தயாரித்த ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனமாகும். இது குறித்து இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அன்பார்ந்த ஊடக நண்பர்களே
வணக்கம்
தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது படைப்பு எண் : 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று இனிதே கொடைக்கானலில் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ்.சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று, அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்,
நன்றிகளுடன்,
ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்.


Click it and Unblock the Notifications











