1000 பட சாதனை: இளையராஜாவுக்கு கேரள அரசின் விருது... முதல்வர் உம்மன்சாண்டி வழங்குகிறார்!
7 மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துச் சாதனை புரிந்திருக்கும் இசைஞானி இளையராஜாவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருதினை வழங்குகிறது கேரள அரசு.
நிஷாகந்தி சங்கீத விருது என்ற இந்த விருதினை வரும் ஜனவரி 20-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் விழாவில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி வழங்குகிறார்.

திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா இதுவரை ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராட்டி, ஆங்கிலம், ஒரியா என பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.
ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், மியூசிக் மெஸையா உள்பட 25-க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார்.
தனது அபார சாதனைகளுக்காக 4 தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் வென்றுள்ள இளையராஜாவுக்கு, புதிய விருதினை அறிவித்துள்ளது கேரள அரசு.
திருவனந்தபுரத்தில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் விழாவில் இந்த விருதை கேரள முதல்வர் உம்மன்சாண்டி இளையராஜாவுக்கு வழங்குகிறார். 'நிஷாகந்தி சங்கீத விருது' என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருது ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் அடங்கியதாகும்.
இந்த விருது வழங்கும் விழாவில் திரைத்துறையில் சாதனை படைத்த பல்வேறு கலைஞர்களும் விருது பெறுகிறார்கள். மேலும் மலையாள திரைப்பட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











