நடிகராக இல்லைன்னா அதுதான் நடந்திருக்கும்... யானை தந்த வழக்கில் மோகன்லாலை பந்தாடிய நீதிபதிகள்!
கொச்சி: மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் வீட்டில் 2012ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
அந்த சோதனையில் மோகன்லால் வீட்டில் 4 ஜோடி யானை தந்தங்களை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மீண்டும் இந்த யானை தந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், நீதிபதிகள் மோகன்லாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2012ம் ஆண்டு ஐடி ரெய்டு
மலையாளத்தில் டாப் ஹீரோவாக கலக்கி வருபவர் மோகன்லால். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் 12த் மேன், ப்ரோ டேடி, மான்ஸ்டர் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றன. இவைகளைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் மோகன்லால். இந்நிலையில் 2012 ஐடி ரெய்டின் போது சிக்கிய யானை தந்த வழக்கில் மோகன்லாலுக்கு எதிராக, நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோகன்லால் வீட்டில் கடந்த 2012ம் ஆண்டு வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர், அப்போது 4 ஜோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கேரள அரசு ஆதரவு
மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் மோகன்லால் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள், இறந்த யானையின் உடையது தான் கேரள அரசு தெரிவித்திருந்தது. இதனால், பெரும்பாவூர் நீதிமன்றத்தில் உள்ள தன் மீதான யானை தந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனு தொடுத்தார். இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் வாதத்திற்கு வந்தது.

நடிகராக இல்லையென்றால் அதுதான்
மோகன்லாலின் மனு மீதான விசாரணையை தொடங்கிய நீதிபதிகள், சரமாரியாக கேள்வியெழுப்பியதுடன் கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர். அதாவது, மோகன்லால் பிரபல நடிகராக இல்லையென்றால் இந்நேரம் சிறை சென்றிருக்கக் கூடும் என பகிரங்கமாக வறுத்தெடுத்தனர். மோகன்லால் பிரபலமான நடிகராக இருப்பதாலேயே கேரள அரசு அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததுடன், வழக்கையும் திரும்பப் பெற்றது. இல்லையென்றால் இப்படி நடந்திருக்குமா எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மோகன்லால் மெளனம்
மோகன்லால் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட இறந்த யானையின் தந்தங்கள் தான் என கேரள அரசு கூறியிருந்ததே, இப்போது இந்த வழக்கில் முக்கிய பாயிண்டாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த தந்தங்கள் சாதாரணமான ஒருவரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தால், கேரள அரசு இதே கருத்தை கூறியிருக்குமா எனவும் உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மோகன்லாலுக்கு எதிரான யானை தந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது, மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











