கிராமத்தில் வாழும் ஒரு சிறுவன் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவு... விருதுகளை அள்ளும் "கிடா "
சென்னை : தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான "கிடா" , கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது !!
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.
இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள்.

பூ ராம் , காளி வெங்கட்
கிடா திரைப்படத்தில் பூ ராம் , காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாரட்டுக்கள் கிடைத்து வருவதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது.

சினிமாவுக்கு மொழி பேதம் இல்லை
இது குறித்து தயாரிப்பாளர் ரவி கிஷோர் கூறியதாவது.. "முதன்முதலில் கிடா கதையை சென்னையில் இருந்தபோது ஒரு நண்பர் சொன்னார். பின் இயக்குநர் வாய்ஸ் நோட் மூலம் அளித்த குறிப்பை கேட்டேன். அந்தக் கதை என் மனதினை உலுக்கியது. உடனடியாக இயக்குனரை ஒப்பந்தம் செய்து படத்தை துவக்கிவிட்டேன். அவருக்கான முழு சுதந்திரம் கொடுத்து அவருடைய கதைக்கு உயிர் கொடுத்தேன். இப்படியாகத்தான் இந்தப் படம் நடந்து, இன்று பல திரைவிழாக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் முதல் தமிழ் படம். சினிமாவுக்கு மொழி பேதம் இல்லை. அதனால்தான் தமிழில் இப்படத்தை செய்தேன். விரைவில் படத்தை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி திரையரங்குகளில் வெளியிடுவோம்"

பேரன் மற்றும் ஒரு ஆடு
இயக்குநர் ரா.வெங்கட் கூறுகையில், "எங்கள் படத்துக்கு இவ்வளவு அரிய அங்கீகாரம் கிடைத்ததை பெருமையாக உணர்கிறேன். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் எளிமையான கதை. ஒரு தாத்தா, அவரது பேரன் மற்றும் ஒரு ஆடு ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். மூவரின் உணர்ச்சிகளே இந்தக்கதையின் உந்து சக்தி. இப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டபோது, இளைஞர்கள் இக்கதையுடன் ஒன்றமாட்டார்கள் என்று நினைத்தேன்.

படத்திற்கான உத்வேகம்
ஆனால் அவர்கள்தான் படத்தை அதிகமாக கொண்டாடினார்கள். பெரும் மகிழ்ச்சி. நான் என் தாத்தா பாட்டியுடன் வளர்ந்தேன், திரைப்படத்தை உருவாக்கும் போது எனது குழந்தை பருவ நினைவுகளிலிருந்து படத்திற்கான உத்வேகம் பெற்றேன். எனது தயாரிப்பாளர் ரவிகிஷோர் அவர்களுக்கு நன்றி. எனது சினிமா பயணத்தின் துவக்கத்தில் நல்ல மனிதருடன் பணிபுரிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன். அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











