'படமே பார்க்காதவர்கள் கூட கோச்சடையானை இரண்டுமுறை பார்ப்பார்கள்' - கேஎஸ் ரவிக்குமார்
சென்னை: சினிமாவே பார்க்காதவர்கள் கூட கோச்சடையானை ஒரு முறை பார்த்தால், மீண்டும் பார்க்க வருவார்கள் என இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பாராட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம் 'கோச்சடையான்'. கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில், சௌந்தர்யா இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வருகிறது.
'போட்டோ ரியலிஸ்டிக் பெர்பாமன்ஸ் கேப்சரிங்' என்ற நவீன தொழில்நுட்பத்தில், முப்பரிமாணத்தில் படம் தயாராகியிருக்கிறது.

முரளி மனோகர்
‘கோச்சடையான்' படம் கைவிடப்பட்டதாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் முரளி மனோகரின் பேட்டியை சில தினங்களுக்கு முன் நாம் அளித்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து படம் குறித்துப் பேசினார்.

அவதார், டின் டின் வரிசையில்...
அவர் கூறுகையில், "ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்', ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘டின் டின்' ஆகிய படவரிசையில் ‘கோச்சடையான்' படம் மிக நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. ‘அவதார்', ‘டின் டின்' ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்களும் தலா ரூ.2 ஆயிரம் கோடி செலவில், நான்கு வருடங்களுக்கு மேல் நேரமெடுத்து தயாரானவை. அந்த படங்களின் கேரக்டரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ரஜினியை அப்படி மாற்ற முடியாது. அவருக்கு கோடானு கோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்களை திருப்திப்படுத்துவது அவசியம். அதனால் அவரது தோற்றம், நடை உடை பாவனை ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி உருவாக்கி உள்ளோம். ஹாலிவுட் படங்களை விட மிரட்டலாக தயாராகி உள்ளது.

ரூ 125 கோடி பட்ஜெட்
‘கோச்சடையான்' படத்தை நாங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ரூ.125 கோடி செலவில், இரண்டு வருடங்களில் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் கிராபிக்ஸ் வேலைகளும், நவீன தொழில்நுட்பங்களும் அதிகமாக இடம்பெற்றிருப்பதால்தான் தாமதமாகிறது.

அனைவரும் பாராட்டுவார்கள்
‘கோச்சடையான்' படம் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய முயற்சி. நிச்சயமாக இந்த படத்தை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து பாராட்டுவார்கள். இளமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் செய்திருக்கும் சாகசங்கள் பரபரப்பாக பேசப்படும்.

ரஜினி, ரவிக்குமார் பாராட்டு
‘கோச்சடையான்' படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு அசந்துவிட்டார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ‘‘படமே பார்க்காதவர்கள்கூட இந்த படத்தை இரண்டு முறை பார்ப்பது நிச்சயம்,'' என்று கூறினார். இயக்குநர் சௌந்தர்யா மிகத்திறமையாக, ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

அக்டோபரில்
படப்பிடிப்பு, எடிட்டிங் பணிகள் முடிவடைந்துவிட்டன. பின்னணி இசைச் சேர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. ‘ஸ்பெஷல் எபக்ட்ஸ்' வேலைகளும் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதத்துக்குள் எல்லா வேலைகளும் முடிவடைந்துவிடும்.
படம் திரைக்கு வரும் தேதி பற்றி அக்டோபர் மாதம் அறிவிப்போம். நிச்சயம் ‘கோச்சடையான்' படம் இந்த ஆண்டில் திரைக்கு வந்துவிடும்.
பாடல் வெளியீடு எங்கு எப்போது என்பதை சீக்கிரம் சொல்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











