பெட்ரோல்தான் கதை, லாரிதான் கதாபாத்திரம்!- லட்சுமி ராமகிருஷ்ணன்
"ஆரோகணம்' படத்திற்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் படம், "நெருங்கி வா முத்தமிடாதே'. இது பெண் இயக்குநர்களின் ஸ்டீரியோ டைப் படம் போல இருக்காது என்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
நடிகை, திரைப்பட இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்ட இவர் தன்னுடைய குடும்பத்தைக் கவனிப்பதுதான் முதல்வேலை என்று கூறியுள்ளார்.
சினிமா, டிவி எல்லாம் தனக்கு இரண்டாவதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய அடுத்த படம் பற்றியும் நிறைய பேசியுள்ளார் படியுங்களேன்

லாரிதான் கதாபாத்திரம்
சாலைகளில் செல்லும் லாரிகளின் பின்பக்கத்தில் நாம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய வாசகம்தான் "நெருங்கி வா முத்தமிடாதே'. லாரிதான் இந்தப் படத்தின் முக்கியப் பாத்திரம்.

பெட்ரோல்தான் கதை
ஒரே ஒருநாள் பெட்ரோல் இல்லையென்றால் நமது அன்றாடப் பணிகள் எவ்வளவு பாதிப்படைகின்றன? இந்த விஷயத்தைப் பின்புலமாக வைத்துதான் இரண்டாவது படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளேன் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

சோதனை முயற்சி
என் முதல் படமான "ஆரோகணம்' ஒரு பரீட்சார்ந்த முயற்சி. ஒருசில குறும்படங்களை இயக்கியிருந்தாலும், என்னால் ஒரு முழுநீளத் திரைப்படத்தை இயக்க முடியுமா என்று சின்ன பட்ஜெட்டில் சோதித்துப் பார்த்த முயற்சி அது.

பாராட்டு பெற்ற படம்
மெடிமிக்ஸ் சோப் நிர்வாக இயக்குநர் ஏ.வி.அனூப் தயாரித்த மலையாளப் படமொன்றில் நான் நடித்தேன். அப்போது நான் சொன்ன "ஆரோகணம்' கதை அவருக்குப் பிடித்திருந்ததால், அவரே தயாரிக்க முன் வந்தார். இந்தப் படம் வணிக ரீதியான வெற்றியை ஈட்டியதுடன், விமர்சகர்களின் பாராட்டுதல்களையும் பெற்றது.

பொழுது போக்குப் படம்
இப்போது இரண்டாவது படத்தையும் இதே தயாரிப்பாளருக்காகத்தான் இயக்கி வருகிறேன். முதல் படத்தைப் போலவே இந்தப் படமும் அர்த்தமுள்ளதாகவும், அதேசமயம் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்குப் படமாகவும் இருக்கும்.

தேசிய விருது பெற்ற கலைஞர்கள்
தேசிய விருதுபெற்ற இரண்டு கலைஞர்கள் இதில் இருக்கிறார்கள். ஒருவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். மற்றொருவர், "வல்லினம்' படத்தொகுப்பாளர் சாபு ஜோசப். கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய மூன்று பாடல்களும் பிரமாதமாக அமைந்திருக்கின்றன. இதுவும் ஒரேநாளில் நடக்கும் கதைதான்.

சினிமா பார்த்ததில்லை
பெண்கள் சினிமா பார்ப்பதற்குக்கூட அனுமதிக்காத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். சிறுவயதில் "ஸ்ரீகுருவாயூரப்பன்', "ஸ்வாமி ஐயப்பன்' ஆகிய இரண்டு படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் நடந்துவிட்டது.

திருமணத்திற்குப் பின்புதான்
திருமணத்துக்குப் பிறகுதான் பி.காம். படித்தேன். பின்னர், பேஷன் டிசைனிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றேன். சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு நான் பணியாற்றிய படங்களின் இயக்குநர்களைப் பார்த்தே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி என 33 படங்களில் நடித்திருக்கிறேன்.

படத்தின் கதை முக்கியம்
என்னைப் பொறுத்தவரை, படத்தின் உள்ளடக்கமே முக்கியமானது, முதன்மையானது என்று நினைக்கிறேன். "ஆரோகணம்' படத்தில் நான் எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தால்தான் படமும் வெற்றிபெற்றது, நானும் பாராட்டப்பட்டேன்.

எனக்காக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி
"சொல்வதெல்லாம் உண்மை' தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஆரம்பிக்கும்போதே என்னைத்தான் அணுகினார்கள். அப்போது நான் "ஆரோகணம்' திரைப்படத்தை இயக்குவதில் பிசியாக இருந்ததால், அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. "ஆரோகணம்' முடிந்த பிறகு மீண்டும் என்னை அணுகினார்கள். சரியென்று சொல்லி அந்த நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தேன்.

குற்றங்களுக்கு தண்டனை
இந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் யாரையும் வற்புறுத்தியோ, வலுக்கட்டாயமாகவோ அழைத்து வருவதில்லை. எங்கள் நிகழ்ச்சிக்கு வரும் பலரும் தங்களுக்கு அநீதி நடந்துவிட்டாலும், தங்களைச் சார்ந்தவர்களுக்கேனும் நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளாமல் தண்டனை பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வருகிறார்கள்.

வெற்றிக்குக் காரணம்
நிகழ்ச்சிக்கு வருபவர்களை என் குடும்ப உறவுகளைப்போல் நினைத்துதான் பேசிப் பழகுகிறேன். மரியாதையான தூரத்தில் அவர்களை நிறுத்திவைத்துப் பழகினால், மனம்விட்டு அவர்கள் உண்மைகளைப் பகிர்ந்து கொள்வார்களா? மற்றபடி நான் நீதிபதி என்றெல்லாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் நினைத்ததில்லை. "சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் முகம்தான் நான். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் பலரின் கடுமையான உழைப்பு இருக்கிறது. அதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.


Click it and Unblock the Notifications











