அபூர்வ ராகம்... அபுதாபியில் கே பாலச்சந்தருக்கு புகழஞ்சலி.. பாரதிராஜா பங்கேற்றார்!
அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பில் நடந்த தமிழ் திருநாள் நிகழ்ச்சியில் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அபூர்வ ராகம் என்கிற தலைப்பில் இயக்குனர் சிகரத்திற்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதி நட்புக்காக
தமிழகத்தில் கூட இத்தனைச் சரியான ஒரு போற்றுதல் நிகழ்ச்சி இயக்குனர் சிகரத்திற்கு இன்னும் நடைபெறாத நிலையில் அபுதாபி பாரதி நட்புக்காக இதில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கலைஞர்கள்
நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக இயக்குனர் பாரதிராஜா, வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, நடிகர் டெல்லி கணேஷ், யூகி.சேது மற்றும் கே.பியின் நிழல் என்று அழைக்கப்படும் அவரின் உதவியாளர் மோகன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அபூர்வ ராகம்
லட்சுமி குருபிரசாத் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.
அபூர்வ ராகம் என்கிற தலைப்பில் பாலச்சந்தரின் பாடல்களை வீணையில் வாசித்தார் ராஜேஷ் வைத்யா.

மோகன்
ஓவியமா? காவியமா? என்ற தலைப்பில் நடனம் ஆடினார் ஆஷா நாயர்.
பாலச்சந்தரின் உதவியாளர் மோகன், தனது அனுபவங்களை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

டெல்லி கணேஷ்
பாலச்சந்தரின் பல படங்களில் இடம்பெற்ற டெல்லி கணேஷ், தனது பாத்திரங்கள், பாலச்சந்தருடனான தனது உறவு குறித்துப் பேசினார்.

பாரதிராஜா
தனக்கும் பாலச்சந்தருக்குமான நட்பை நெகிழ்வுடன் கூறினார் பாரதிராஜா. 15 ஆண்டுகளுக்கு முன்னதாக இருவரும் பேசிக் கொண்டபடி.. அவர் உடலைச் சுமந்துசெல்கிற பாக்கியம் கிடைத்ததை உணர்வுடன் பகிர்ந்து கொண்டார்.

சிறப்பான ஏற்பாடு
பாரதி நட்புக்காக அபைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன் தலைமையேற்க, பொதுச்செயலாளர் ஹலீல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.
அமைப்பின் நிறுவனர் ஜகன், ஆலோசகர்கள் வீரமணி, டாக்டர் சிவராமன், செயற்குழு உறுப்பினர்கள் முனீஸ்வரன், கதிரேசன், முரளி கிருஷ்ணன், முருகப்பன், சித்ரா செந்தில்குமார், வித்யா அனந்தராமன் மற்றும் சங்கீதா ஸ்ரீகாந்த் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











