30 வருட திரைப்பயணம்: குட்டி பத்மினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
சென்னை: நாடகம், தொலைகாட்சி, திரைப்படத்துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக சாதனை புரிந்து வரும் திரைப்பட நடிகையும். தயாரிப்பாளருமான நடிகை குட்டி பத்மினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குட்டிபத்மினி, சிவாஜி, எம்ஜிஆர் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். பின்னாளில் பல படங்களில் நாயகியாக நடித்த குட்டி பத்மினி. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் பல சின்னத்திரை சீரியல்களை தயாரித்துள்ளார். கடைசியாக, குட்டி பத்மினி தென்பாண்டி சிங்கம் என்ற சீரியலை தயாரித்தார்.

நடிகை குட்டி பத்மினி: மேலும் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி தனது வாழ்க்கை வரலாறு குறித்து பேசி வரும் குட்டி பத்மினி, பல விஷங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், எனக்கு 21 வயது இருக்கும்போது எனது அம்மாவின் பிடிவாதத்தால் திருமணம் செய்துகொண்டேன். அப்போது காதல் பற்றி எனக்கு தெரியாது. ஆனாலும் என் முதல் திருமணம் சரியில்லாமல் போனது.
சொந்தமாக யூடியூப் சேனல்: அதன்பிறகு தனது 35 வயதில் பிரபு என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல், திருமணம் வாழக்கை என்பது பற்றி தெரிந்துகொண்ட அந்த வயதில் அவருக்காக அவருடைய காதலுக்காக தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை தோல்வி அடைய தனது நான்கு குழந்தைகளுடன் தனியாக வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். தற்போது, சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி இருக்கும் இவர், தனது வாழ்க்கை அனுபவம் குறித்தும் பழம் பெரும் நடிகர்கள் பற்றியும் பேசி வருகிறார்.
ஊழியர்களுக்கு சொத்து: அண்மையில் இவர் வெளியிட்டு இருந்த வீடியோவில், நான் இறந்த பிறகு என் புத்தகங்கள் சென்னை சிறைச்சாலைக்கும், என் புடவைகள் நாடக கம்பெனிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டேன். என் கடைசி நாளில் என் பெயரில் நிறுவனத்தில் என்ன இருக்கிறதோ அவை அனைத்தும் ஊழியர்களுக்குதான் சொந்தம். அதில் கடன் ஏதாவது இருந்தால் அதை என் பிள்ளைகள் அடைப்பார்கள். வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்குதான் சொத்து. இந்த உலகத்தை விட்டு சீக்கிரம் போய்விட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சொத்து தேவையில்லை என்று மனம் திறந்து பேசி இருந்தார். அந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் அவரின் இந்த செயலை மனதார பாராட்டினார்கள்.
வாழ்நாள் சாதனையாளர் விருது: இந்நிலையில், இந்தி சாகித்யா அகாடமி சார்பில், நாடகம் , தொலைகாட்சி, திரைப்படத்துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக சாதனை படைத்து வரும் திரைப்பட நடிகையும், திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளரும், இயக்குனருமான குட்டி பத்மினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது. சென்னையில் கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் நடை பெற்ற விழாவில் பலர் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











