பிரபல பாடலாசிரியர் புலமைபித்தன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை : எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என டாப் ஹீரோக்கள் பலரின் படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களின் வரிகளுக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர் புலமைபித்தன். இவர் சட்டமன்ற உறுப்பினர் குழுவின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
பிரபல சினிமா பாடலாசிரியரான புலமைபித்தன், உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 85.
புலமைபித்தனின் உடல்நலம் குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆகஸ்ட் 31 ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு புலமைபித்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல் நலம் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து அவரது குடும்பத்தினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

புலமைபித்தன், எம்ஜிஆர் நடிக்க வந்த காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் பாட்டெழுதி வருகிறார். இவர் முதன் முதலில் எழுதிய பாடலே எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் வரும் நான் யார் நீ யார் என்ற பாடல் தான். இந்த படம் 1968 ம் ஆண்டு வெளிவந்தது.
கடைசியாக வடிவேலு ஹீரோவாக நடித்த எலி படத்திற்கு பாடல் வரிகள் எழுதி இருந்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்திற்காக தாய்மை என்ற பாடலை எழுதினார். இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடி இருந்தார். ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ஜெயம் படத்திற்கு பாட்டெழுதியதும் இவர் தான்.
சினிமா பாடலாசிரியர் ஆவதற்கு முன் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார் புலமைபித்தன். தமிழக அரசிடம் பல விருதுகளை வாங்கிய இவர், பெரியார் விருதினையும் பெற்றுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டவர் புலமைபித்தன்.


Click it and Unblock the Notifications











