உயிருடன் இருக்கிறார் வேந்தர் மூவிஸ் மதன்.. உ.பி.யில் போலீஸிடமிருந்து தப்பினார்!
வாரணாசி: கங்கையில் மூழ்கப் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டுத் தலைமறைவான வேந்தர் மூவிஸ் மதன் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் உ.பி. மாநிலம் பபத்பூர் விமான நிலையத்திலிருந்து போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளார்.
2 வாரங்களுக்கு முன் காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதன் உயிருடன் இருக்கிறாரா? இல்லை கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் தேடி வந்தனர். அவரைக் கொன்று எரித்து விட்டதாக கூட செய்திகள் வெளியாகின.
மதன் விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கூறியது இந்த விவகாரத்தை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்தது. மதன் தாயார், மனைவிகளும் சரமாரியாக புகார்களைக் கூறி வந்தனர்.

மதன்
தமிழ்த் திரையுலகின் தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம்வந்த மதன் 2 வாரங்களுக்கு முன் கங்கையில் சமாதி அடையப் போவதாக கடிதம் எழுதிவைத்து விட்டு சென்றார். எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தருக்கும், தனக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பே இதற்குக் காரணம் என்று கடிதத்தில் மதன் குறிப்பிட்டிருந்தார்.

காசி
இதனைத் தொடர்ந்து மதனை தயாரிப்பாளர் டி.சிவா தலைமையிலான குழுவினர் காசி, வாரணாசி பகுதிகளில் படகுகள் மூலம் தேடிப் பார்த்தனர். ஆனால் கங்கை நதியில் தேடியும் மதனைக் கண்டறிய முடியவில்லை. தேடுதலில் மதனைக் கண்டறிய முடியாத சூழ்நிலையில் கூலிப்படையால் அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

மோசடி
மற்றறொருபுறம் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு சீட் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துவிட்டதாக மதன் மீது 50-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.

தங்கம்
கடந்த வாரம் மதனின் தாயார் தங்கம் செய்தியாளர்களை சந்தித்து தனது மகனுக்கும், பாரிவேந்தருக்கும் இடையிலான பனிப்போரே இதற்குக் காரணம் என்று பேட்டியளித்தார்.மேலும் மதனைக் கண்டறிய ஆட்கொணர்வு மனு ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மதனைத் தேடுவதற்கு தனிப்படை ஒன்றை போலீசார் அமைத்தனர்.

விமான நிலையத்தில்
இந்நிலையில் மதன் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் (காசி) பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலையில் பாபத்பூர் விமான நிலையத்திற்கு வந்த மதனை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் போலீசார் சுற்றி வளைப்பதை அறிந்த மதன் விமான நிலையத்தின் வேறு வாயில் வழியாக தப்பிச்சென்று விட்டார்.

உயிருடன் இருக்கிறார்
இதன் மூலம் மதன் உயிருடன் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. மதன் வெளியே வந்தால் பல உண்மைகள் அவருடன் சேர்ந்து வெளிவரும் என்பதால் மதனைப் பிடிக்கும் முயற்சிகளில் போலீசார் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











