கொரோனாவில் இருந்து மீண்ட மாதவன் குடும்பத்தினர்
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கும், தனது குடும்பத்தினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நடிகர் மாதவன், சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் நெகடிவ் என சோதனையில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். மாதவன் தனது ட்வீட்டில், எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. அம்மா உட்பட வீட்டில் உள்ள அனைவருக்கும் மீண்டும் கோவிட் நெகட்டிவ் என வந்து விட்டது. வைரஸ் தொற்று என நிலையை முற்றிலுமாக கடந்து வந்து விட்டோம்.

ஏறக்குறைய அனைவரும் கவனத்துடன், முன்னெச்சரிக்கையாக, வீட்டிலும் மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறோம். கடவுள் அருளால் அனைவரும் நலமுடன், ஆரோக்கியமாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
மாதவன் நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. மாதவன் முதல் முறையாக டைரக்ட் செய்துள்ள படம் இது. இது முன்னாள் விஞ்ஞானி மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர் நம்பி நாராயணனின் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவும், இந்தியில் ஷாருக்கானும் சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











