இறுதிச்சுற்று: ஹீரோயின் விட்ட குத்தில் எனது பல்லே உடைந்து விட்டது - மாதவன்
சென்னை: இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங் விட்ட குத்தில் எனது பல்லே உடைந்து விட்டது என்று நடிகர் மாதவன் தெரிவித்திருக்கிறார்.
மாதவன் நீண்ட வருடம் கழித்து தமிழில் நடித்திருக்கும் இறுதிச்சுற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது.
இறுதிச்சுற்று குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவில் நடிகர் மாதவன் தனது சுவாரஸ்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்.

இறுதிச்சுற்று
'துரோகி' சுதா இயக்கியிருக்கும் இறுதிச்சுற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் மாதவன், ரித்திகா சிங், சூர்யா, பாலா, சித்தார்த், ராஜ்குமார் ஹிரானி, சசிகுமார், சி.வி.குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மாதவன்
இறுதிச்சுற்று மூலம் 6 வருடங்கள் கழித்து தமிழுக்கு வரும் மாதவன் இந்த விழாவில் இறுதிச்சுற்று படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது தமிழ் ரசிகர்கள் தற்போது வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கின்றனர். அதனால் தான் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறேன். என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்பவராக ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.

பல் உடைந்தது
உண்மையில் ரித்திகா சிங் ஒரு சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனையாவார். ஒருமுறை நான் அவருக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது எனது ஒரு பல்லையே உடைத்து விட்டார். அந்த அளவுக்கு அவரின் அடி இருந்தது.

பொம்பள பொறுக்கி
படத்தின் கதைப்படி நான் ஒரு கோச்சாக இருந்தாலும் இந்தப் படத்தில் என்னை பொம்பள பொறுக்கி போன்றும் சில காட்சிகளில் பார்க்கலாம். மனிதர்களின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

பெட்ரூம் காட்சி
இயக்குநர் ஒரு பெண்ணாக இருந்தும் பெட்ரூம் காட்சி ஒன்றை படத்தில் வைத்திருக்கிறார். காட்சிகள் எதிலும் நான் லிமிட் தாண்டி நடிக்கவில்லை.இறுதிச்சுற்று என் வாழ்வில் முக்கியமான படம். அதனை உணர்ந்து இந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

ரசிகர்களிடம் சேர்க்க வேண்டும்
என்னதான் படத்தில் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதனை ரசிகர்களிடம் சரியானபடி கொண்டு சேர்க்கும் போதுதான் நமது உழைப்பிற்கு பலன் கிடைக்கும். அந்த வகையில் இந்தப் படத்தை யூடிவி நிறுவனம் வாங்கி உலகெங்கும் வெளியிடுகிறார்கள். அதனால் இறுதிச்சுற்று ஒரு மாபெரும் வெற்றியைப் பெறும் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு மாதவன் கூறினார்.
தமிழ், இந்தியில் உருவாகி இருக்கும் இறுதிச்சுற்று வருகின்ற 29ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











