SS MB 29: அவதார் படத்துடன் மகேஷ் பாபு படத்தை முடுச்சு போடும் ராஜமௌலி.. அதுமட்டும் நடந்தா எப்படி இருக்கும்?
டோலிவுட் திரையுலகம் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கூட்டணியின் புதிய படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. ரசிகர்கள் படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் இருந்தாலும், படக்குழு அமைதியாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது. தற்போது, ராஜமௌலி, ரசிகர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் அளிக்க உள்ளதாக டோலிவுட்டில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
மகேஷ் பாபுவின் 29-வது படமான இது, தற்போது 'SSMB29' என்ற தற்காலிக தலைப்பில் உருவாகி வருகிறது. ராஜமௌலி இயக்கும் இந்தப் படம், பான் இந்தியா மட்டுமல்லாமல் பான் வேர்ல்டு படமாக உருவாகும் என தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. துர்கா ஆர்ட்ஸ் தயாரிப்பின் கீழ், பிரபல தயாரிப்பாளர் கே.எல். நாராயணன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுடன் குளோபல் ஸ்டார் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். மேலும், நமது மேடி மாதவன், ஜான் ஆபிரகாம், பிருத்விராஜ் சுகுமாரன், பிரியதர்ஷி புலிகொண்டா போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். ஏற்கனவே ராஜமௌலி படங்களுக்கு இசையமைத்து வரும் எம்.எம். கீரவாணி இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'RRR' படத்திற்காக ஆஸ்கர் எம்.எம். கீரவாணி ஆஸ்கார் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பி.எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக் காட்சிகளை டோடர் லாசரவ் இயக்குகிறார்.
படப்பிடிப்பு: படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி, ஒரிசாவில் நிறைவடைந்துள்ளது என்ற தகவல் ஏற்கனவே திரைத்துறை வட்டாரத்தில் பரவி வருகிறது. சமீபத்தில், படத்தின் முக்கிய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. தற்போது, அடுத்த கட்ட படப்பிடிப்பு நைரோபியில் நடத்த படக்குழு தயாராகி வருகிறது என்று கூறப்படுகிறது. மகேஷ் பாபுவும், பிரியங்கா சோப்ராவும் படப்பிடிப்புக்காக கென்யாவின் நைரோபியை அடைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜமௌலி ப்ளான்: ஆகஸ்ட் 9 அன்று மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு, ரசிகர்கள் படத்தின் முதல் பார்வை அல்லது க்ளிம்ப்ஸ் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், ராஜமௌலி எதுவும் வெளியாகாது பிம்பிலிக்கா பிலாப்பி என ரசிகர்களுக்கு கூறியதால், ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். எனினும், தற்போது வெளியாகி உள்ள ஒரு தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
க்ளிம்ப்ஸ் ரிலீஸ்: ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியின் படத்தின் முதல் பார்வை க்ளிம்ப்ஸ் 'Gen63' என்ற பெயரில் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், தனது 'அவதார்: தி ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் விளம்பரத்திற்காக இந்தியா வர இருப்பதால், அவர் மூலம் இந்தக் க்ளிம்ப்ஸ் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. ராஜமௌலி இந்தப் படத்தை உலகளாவிய தரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும், அதற்காக ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகவுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அவதார் படத்தின் மூன்றாம் பாகம் வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











