திரைத்துறையில் அடுத்தடுத்த சோகம்… பிரபல மலையாள நடிகர் மாரடைப்பால் காலமானார் !
கொச்சி: பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.
மலையாள திரைப்பட நடிகர் கோட்டயம் பிரதீப் நகைச்சுவை நடிகராவார். அசரவைக்கும் பேச்சாலும், தனது உடல் மொழியாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். ஈ நாளில் இன்னாலே வாரே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும், பிலிப்ஸ் அண்ட் மங்கி பென், லால் பகதூர் சாஸ்திரி போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான விண்னைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் த்ரிஷாவின் மாமாவாக நடித்திருப்பார். அதேபோல ராஜா ராணி, நண்பேன்டா,தெறி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரதீப்பிற்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். அவருக்கு மாயா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கோட்டயம் பிரதீப்பின் திடீர் மறைவால் மலையாளத்திரைத்துறை சோகத்தில் மூழ்கி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோட்டயம் பிரதீப் கடைசியாக 2021ம் ஆண்டு வெளியான பிளாக் காபி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நேற்று பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதேபோல, தனது குரலால் பலர் மனதையும் வசியம் செய்த லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6ந் தேதி உயிரிழந்தார். திரைத்துறையில் அடுத்தடுத்து வரும் உயிரிழப்பால் திரைத்துறையினர் சோகத்தில் ழுழ்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











