புத்தாண்டு முதல் மலையாள சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தம்!
ஊதிய உயர்வு பிரச்சினை காரணமாக நாளை புத்தாண்டின் முதல் நாளிலிருந்து மலையாள சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக மலையாள சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள மலையாள சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கமான ‘பெப்கா' தனது தொழிலாளர்களுக்கு 33.5 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.
இதற்கு மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. தொழிலாளர்களுக்கு இந்த அளவு சம்பள உயர்வு வழங்கினால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தது.
இதனால் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டது.
இந்த நிலையில் மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் வெளிமாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாகும். இங்குதான் கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தொழிலாளர்கள் கேட்டுள்ள சம்பள உயர்வு 70 சதவீதம் வரை கூடுதலாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்த அளவுக்கு சம்பள உயர்வு அளிக்க முடியாது.
இதனால் தயாரிப்பு செலவு அதிகமாகி படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேறு வழியின்றி வருகிற 1-ந்தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











