தொந்தரவின்றி மனைவி படம் பார்க்க... மொத்த தியேட்டரையும் புக் செய்த 'பாசக்கார' கணவர்!
சிம்லா: தனது மனைவி எந்தத் தொல்லையும் இன்றி படம் பார்ப்பதற்காக, ஒரு தியேட்டரின் மொத்த டிக்கெட்களையும் கணவர் முன்பதிவு செய்த சம்பவம் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
அந்த பாசக்கார கணவரின் பெயர் சங்கர் முசாம்பீர். சங்கர் கடந்த ஏப்ரல் மாதம் கீதாஞ்சலி என்பவரைக் காதலித்து மணம் புரிந்தார்.
மனைவி தீவிரமான சல்மான் கான் ரசிகை என்பதால் அவரை நேரில் கூட்டி சென்று, சல்மான் கானைப் பார்க்க வைக்க சங்கர் பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை.

இதனால் சல்மான் கானை நேரில் சந்திக்க வைக்க முடியாவிட்டாலும் அவரது படத்தையாவது மனைவி எந்தத் தொந்தரவும் இல்லாமல் பார்க்க வேண்டும் என சங்கர் திட்டம்தீட்டினார்.
இதனைத் தொடர்ந்து சல்மான் கான்-அனுஷ்கா சர்மா நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான சுல்தான் படத்தின் மொத்த டிக்கெட்களையும்(120) அங்கிருந்த மால் ஒன்றில் முன்பதிவு செய்தார்.
மால் நிர்வாகிகளிடம் தனது நண்பர்களுடன் வந்து படம் பார்க்கப் போவதாக கூறிய சங்கர் தனது மனைவியுடன் மட்டும் வந்து, அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
சங்கரின் இந்த செயல் குறித்து மாலின் உரிமையாளர் அமித் தாக்கூர் ''சங்கர் நண்பர்களுடன் வருவதாகக் கூறி முன்பதிவு செய்தார். ஆனால் அவர் தனது மனைவியுடன் மட்டும் வந்து படம் பார்த்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது'' என தெரிவித்திருக்கிறார்.
2 நாட்கள் முடிவில் சுல்தான் 70 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











