திரை வித்தகன்.. மணிரத்தினம் பிறந்த நாள் இன்று.. குவியும் வாழ்த்துக்கள் !
சென்னை : இந்திய அளவில் அறியப்படும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் மணிரத்னம் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
மூன்று தலைமுறை நாயகனின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரின் அப்டேட் கேட்டு அதனையும் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

மணிரத்னம்
இயக்குநர் மணிரத்தினம் 1956ம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் கோபால ரத்னம் சுப்பிரமணியம். சினிமாவிற்காக தன்னுடைய பெயரை மணிரத்னம் என மாற்றி வைத்துக் கொண்டார். சினிமா தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த குடும்பத்தில் பிறந்த மணிரத்தினத்திற்கு சிறுவயது முதலே சினிமா மீது தீராத காதல் இருந்துள்ளது. இருப்பினும், அப்பாவின் ஆசைப்படி எம்பிஏ பட்டம் பெற்று ஒரு நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.

பல்லவி அனுபல்லவி
கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரின் படங்கள் இவரின் சினிமா ஆசையை மேலும் தூண்டி விட்டன. இதனால் சினிமா மீது தனது கவனத்தை திரும்பி கதை எழுதி வைத்துக்கொண்டு காத்திருந்தார். இவரின் கதையை இயக்க யாரும் முன்வராததால், தானே தயாரிக்க முன்வந்தார். 1983ம் ஆண்டு 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னட படத்தை இயக்கி இயக்குநராக அவராதம் எடுத்தார் மணிரத்னம்.

முதல் படத்திலேயே விருது
பல்லவி அனுபல்லவி திரைப்படம் பெரும் வசூலை பெற்றுத்தரவில்லை என்றாலும், இப்படம் சினிமா வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக மாநில அரசின் விருதை வென்றார் மணிரத்னம்.

அளவெடுத்த வசனங்கள்
இதையடுத்து, மலையாளத்தில் உணரு, இதயம் ஒரு கோவில், பகல் நிலவு, மௌனராகம் போன்ற படங்களை இயக்கினார். இதில், மௌனராகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மணிரத்னத்தை உச்சாணிக் கொம்பில் ஏற்றி விட்டது. காதலானாலும் சரி, தீவிரவாதமானாலும் சரி தனக்கென ஒரு தனி பாணியை வைத்து இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இவருடைய படங்களில் சிறப்பான திரைக்கதையும், நேர்த்தியான தொழில்நுட்பமும் , அளவெடுத்த வசனங்களுமே பெயர் பெற்றவை.

காலத்தால் அழியாத படங்கள்
உலக நாயகன் நடிப்பில் உருவான நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே, இருவர், ஆயுத எழுத்து, அலைபாயுதே என காலத்தால் மறக்கமுடியாத பல திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமாவின் பெரிதும் மதிக்கப்படும் படைப்பாளியாகத் திகழ்கிறார் மணிரத்னம். ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

'பொன்னியின் செல்வன்
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு பல முன்னணி நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. வரலாற்று திரைப்படமான இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.

மணிரத்னம் பிறந்தநாள்
இயக்குநர் மணிரத்னம் தனக்கென்று ஒரு பிரத்யேகத் திரைமொழியையும் உருவாக்கி அதை இன்று வரை கட்டிகாத்து வருகிறார். இன்று 66வது பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்தினத்திற்கு சமூக வலைதளங்களில் ஒருபுறம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலரை அப்டேட் கேட்டு அதனையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











