திருட்டு விசிடியை ஒழிக்க முடியாதவர்கள் எதற்கு பதவிக்கு வரவேண்டும் - மன்சூர் அலிகான்
சென்னை: திருட்டு விசிடியை ஒழிக்க முடியாதவர்கள் எதற்காக தயாரிப்பாளர் சங்கப் பதவிக்கு வரவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மன்சூர் அலிகான்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக எஸ் ஏ சந்திரசேகரன் கோஷ்டி, கேயார் கோஷ்டி என யார் பதவிக்கு வந்தாலும், தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு மோதல்களும், வழக்குகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 25-ந்தேதி சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கலைப்புலி தாணு, நடிகர் மன்சூர் அலிகான், கமீலா நாசர் மூவரும் அறிவித்துள்ளனர்.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந் தேதியே தொடங்கிவிட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றுதான் கடைசி நாளாகும். கலைப்புலி தாணு, மன்சூர் அலிகான், கமீலா நாசர் மூவரும் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, "தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய சகாப்தம் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக 300, 400 படங்கள் விற்கப்படாமல் அப்படியே இருக்கின்றன. பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுப்பதற்காகத்தான் பதவிக்கு வருகிறார்கள்.
புதுப் பட சிடிக்கள் உடனுக்குடன் பிளாட்பாரத்துக்கு வந்துவிடுகின்றன. அரசு பஸ்சில் இருந்து ஏ.சி. பஸ்களில் எல்லாம் அந்த படம் ஓடுகிறது. தாம்பரத்தைத் தாண்டினா கேபிள் டி.வி.யில் படம் ஓடுகிறது. இதையெல்லாம் தடுக்க முடியாதவர்கள் எதற்கு பதவிக்கு வருகிறார்கள் என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.
தயாரிப்பாளர்கள் சொத்து தெருவில் விற்கப்படுகிறது. இதையெல்லாம் பாதுகாக்க முடியவில்லை. இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் நேரடியாக செயலில் ஈடுபட வேண்டும். இதற்கான செயல் திட்டத்துடன்தான் நான் போட்டியில் நிற்கிறேன்.
நான் பதவிக்கு வந்தால் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் எந்த பேருந்திலும், எந்த கேபிள் டி.வி.யிலும் எந்த புதுப்படமும் திருட்டு வி.சி.டி.யும் இருக்காது. நான் நியாயத்திற்காக போராடுகிறேன். கண்டிப்பாக வெற்றி பெறுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











