முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்.. வெறித்தனமாக வசனம் பேசும் விஜய்.. ஏதாவது உள்குத்து இருக்கா?
சென்னை: மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் வசனம் பேசும் அசத்தலான புரமோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
"முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்" என தளபதி விஜய் பேசும் மெர்சலான வசனம் ரசிகர்களுக்கு கேட்டதும் பிடிக்கும் பன்ச்சாக மாறியுள்ளது.
வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வருகிறது.

தியேட்டரில் திருவிழா
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், கடந்த ஓராண்டாக வெறிச்சோடிய தியேட்டர்களில் திருவிழா கொண்டாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது விமர்சனங்களை கிளப்பி வருகிறது.

புரமோஷன் ஆரம்பம்
மாஸ்டர் படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாஸ்டர் டிரைலர் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்று முதல் மாஸ்டர் திரைப்படத்தின் புரமோஷன் காட்சிகளை மாஸ்டர் படக் குழு வெளியிட ஆரம்பித்துள்ளது.

விஜயின் மரண குத்து
நடனம் ஆடுவது என்பது விஜய்க்கு அல்வா சாப்பிடும் விசயம் தான். வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு தளபதி விஜய் செம மரண குத்து ஆடிய வீடியோ புரமோ டீசர் நேற்று வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. விஜய்யின் ரியல் மற்றும் ரீல் நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் அவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளனர்.

மாஸ்டர்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் வில்லன் அர்ஜுன் தாஸுக்கு வைத்த லைஃப் டைம் செட்டில்மென்ட் வசனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. மாஸ்டர் படத்தின் டீசரில் விஜய் ஒரு வசனம் கூட பேசாத நிலையில், ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. இந்நிலையில், தற்போது முதன் முறையாக மாஸ்டர் படத்தில் விஜய் பேசிய வசனத்துடன் சேர்ந்த புரமோ டீசர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்
மாஸ்டர் படத்தில் எந்தவொரு பன்ச் வசனமும் இல்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். ஆனால், விஜய் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களுக்கு பன்ச் வசனம் போலத்தான். இந்த புரமோவில் விஜய் பேசும், "இதுக்கு முன்னாடி இங்க வந்தவன் உயிர் பயத்துல ஓடிப் போயிருக்கலாம்.. என் கதையே வேற.. முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம்" எனும் வசனம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

உள்குத்து இருக்கா?
மேலும், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் வசனத்தில் வரும், "இதுக்கு முன்னாடி இங்க வந்தவன் உயிர் பயத்துல ஓடிப் போயிருக்கலாம்.. என் கதையே வேற.." என்கிற வசனத்தில் ஏதாவது உள்குத்து இருக்கா? என்றும், இந்த வசனம் பிரபல நடிகர் ஒருவரை தாக்குவதை போல இருக்கிறதே எனவும் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











