பீஸ்ட் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவை போரா ?...பீஸ்ட் படத்திற்கு எதிராக வழக்கு
சென்னை : பீஸ்ட் படத்திற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது. பீஸ்ட் படத்தின் டீசர் வெளியான போதே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது வழக்கு தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்போதே, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி சில இஸ்லாமிய அமைப்புகள் பீஸ்ட் படக்குழுவினரை எச்சரித்திருந்தனர். இந்நிலையில் இன்று பீஸ்ட் படம் ரிலீசானது. இதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்திற்கு எதிர்ப்பு
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது என்றால் அது மிகையாகாது. வீரராகவன் என்ற கதாநாயக கதாபாத்திரம் ஜோசப் விஜய்யும் , உமர் பாரூக் என்கிற வில்லன் கதாபாத்திரம் புதுமுகமும் நடித்து உள்ளனர். படத்தில் உமர் பாரூக் இந்தியாவில் என்ன குற்றம் செய்தார் என்கிற விபரங்கள் எல்லாம் சிறிதும் திரைப்படத்தில் இல்லை.

விஜய், நெல்சனின் பிளானா
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க இந்த கதாபாத்திரங்கள் இயக்குனர் நெல்சனுக்கு தேவைபட்டுள்ளது. உமர் பாரூகின் தம்பி உமர் சரீப் சென்னை ஈசிஆரில் உள்ள ஷாப்பிங் மஹாலை ஹைஜாக் செய்து விட்டதால் அங்குள்ள மக்களை மீட்க இஸ்ரேல் உளவு அமைப்பான (மொஸாத்) இஸ்ரேலியர்களை உதவிக்கு அழைப்பது போன்ற காட்சியை பார்த்தால் முஸ்லிம்களை வில்லனாக காட்சி படுத்த யூதர்களை கதாநாயக கதாபாத்திரம் கொடுத்து உள்ளனர் ஜோசப் விஜய்யும் நெல்சனும்.

முஸ்லீம்களுக்கு எதிராக சிலுவை போரா
நகைச்சுவை திரைப்படமாக எடுக்க முயற்சி எடுத்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படத்தை முடித்து உள்ளார் நெல்சன். காவி ஸ்கீரின் கிழிப்பது போன்ற காட்சி நீக்கப்பட்டு பேனர் கிழிப்பு காட்சி அமைத்து உள்ளனர். காரணம் மத்திய பாஜக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்குமே என்ற அச்சமாக இருக்கலாம். வில்லன் உமர் சரீபை , விஜய் அடிக்கும் காட்சியின் போது தியேட்டரில் படம் பார்க்கும் ஜோசப் விஜய்யின் ரசிகர்கள் விடாதே அடி கொல்லு என ஆக்ரோஷமாக கூச்சல் போடுவதை பார்த்தால் பீஸ்ட் திரைப்படம் ஜோசப் விஜய் மற்றும் வில்சன் இணைந்து நடத்திய திரைப்பட சிலுவை போர் என்றால் அது மிகையாகாது.

பீஸ்டுக்கு தடை வேண்டும்
பீஸ்ட் திரைப்படத்தை உடனே தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் மற்றும் நடிகர் ஜோசப் விஜய் இயக்குனர் வில்சன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் .. உயர்நீதிமன்றம் மூலம் பீஸ்ட் திரைப்படத்தை தடை விதிக்க எங்களது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம். மிக விரைவில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்ய கோரி வழக்கு தொடுக்க உள்ளோம்.

வழக்கும் போடுவோம்
ரமலான் நோன்பு இருப்பதால் நடிகர் ஜோசப் விஜய் வீடு முற்றுகை போராட்டம் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஆகவே இந்திய தேசிய லீக் கட்சி தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் போது நடிகர் ஜோசப் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இறைவனின் சாபம் கிடைக்க சிறப்பு பிரார்த்தனை (துவா) செய்யப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











