பெப்சி - தயாரிப்பாளர் பிரச்சினையில் நடுநிலை வகிப்போம் - நடிகர் சங்கம் அறிவிப்பு
சென்னை: தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கிடையிலான பிரச்சினையில் நடுநிலை வகிக்கப் போவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையில் ஒரு முடிவு எடுப்பது பற்றி நடிகர்-நடிகைகளின் ஆலோசனை கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு நடந்தது.

கூட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமைதாங்கினார். துணைத்தலைவர் விஜயகுமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடிகர்கள் கார்த்தி, சிலம்பரசன், கரண், சரவணன், நந்தா, அருண்விஜய், விதார்த், சாந்தனு, பிருதிவி பாண்டியராஜன், பொன்வண்ணன், அம்சவர்தன், ஸ்ரீகாந்த், விமல், ஆனந்தராஜ், கருணாஸ், தியாகு, மனோபாலா, மயில்சாமி, டாக்டர் சீனிவாசன் (பவர் ஸ்டார்!) நடிகைகள் மும்தாஜ், நளினி, ரோகினி, சத்தியபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி பின்னர் சரத்குமார் கூறுகையில், "தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையில் நடிகர்-நடிகைகள் நடுநிலையாக இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுவிட்டதால், படப்பிடிப்புகளில் நடிகர்-நடிகைகள் தாராளமாக பங்கேற்கலாம். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. தேவைப்பட்டால் தயாரிப்பாளர்கள்-பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினையில் நடிகர்-நடிகைகள் தலையிட்டு சமரசம் செய்துவைப்போம்," என்றார்.
அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடந்த பெப்சி - தயாரிப்பாளர் பேச்சுவார்த்தையின்போது சரத்குமாரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அன்றைக்கு பிரச்சினை தீர்ந்ததாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறிய சரத்குமார், இப்போது பிரச்சினை தொடர்வதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











