ரூ. 2 கோடியைத் திரட்டக் கூடவா நடிகர் சங்கத்துக்கு முடியாமல் போய் விட்டது..??
சென்னை: நடிகர் சங்கம் கட்ட நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி வசூல் செய்யவிருப்பதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நேற்று தெரிவித்திருக்கிறார்.
இதில் ரஜினி, கமல் தொடங்கி அனைத்து நடிகர்களும் பங்கு பெறுவார்கள் என்றும் இதற்காக தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு பேச்சுவாரத்தை நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்கும்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்த நடிகர்கள் மக்களிடம் வசூல் செய்து சங்கக் கட்டிடம் கட்ட நினைப்பது ஏன்? என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.

நடிகர் சங்கத் தேர்தல்
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற விஷால் செய்த காரியங்கள் நாம் அனைவரும் அறிந்ததுதான். கடைசியில் ஒருவழியாக தேர்தலிலும் ஜெயித்துக் காட்டினார். இத்தனை வருடங்களில் அமைதியாக நடந்து கொண்டிருந்த சங்கத் தேர்தலை ஆல் இந்தியா அளவிற்கு பேச வைத்த பெருமையும் இவரையே சேரும்.

மீண்டும் ஆரம்பம்
இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்று மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார் விஷால். நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் அனைத்து நடிகர்களையும் கலந்து கொள்ள வைத்து மக்களிடம் அதற்கான பணத்தை டிக்கெட் மூலம் வசூலிப்பதுதான் இவர்களின் எண்ணமாக உள்ளது.

கோடிக்கணக்கில்
சினிமாவில் உள்ள சாதாரண நடிகர்கள் கூட கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது எல்லா நடிகர்களும் கொஞ்சம் பணம் போட்டு இந்த சங்கக் கட்டிடத்தை கட்ட முடியாதா? என்ன. ரஜினி தொடங்கி அனைத்து நடிகர்களும் பணம் போட்டாலே கட்டிடத்தை பிரமாண்டமாக கட்டலாமே?

நடிகர்கள் ஒன்றிணைந்து
மேலும் நடிகர்கள் ஒன்றிணைந்து ஒரு படத்தில் நடித்து அதன் மூலம் வருகின்ற பணத்தையும் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக பயன்படுத்தப் போகிறார்களாம். ஆக மொத்தம் தங்களின் நலனுக்காக கட்டப்படும் சங்கக் கட்டிடத்திற்கு பணம் கொடுக்க எந்த ஒரு நடிகரும் முன்வரவில்லை என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நடிகர் சங்க நிலம்
சமீபத்தில் எஸ்பிஐ சினிமாஸ் உடன் போட்ட ஒப்பந்தத்தை முறியடித்து நடிகர் சங்க நிலத்தை விஷால்&கோ மீட்டிருக்கிறது. ஆனால் அதற்கு செலவான 2.48 கோடிகளில் 2 கோடியை கடன் வாங்கித்தான் மீட்டிருக்கின்றனர். ஏன் வெறும் 2 கோடிகளைக் கூட தங்களின் எதிர்கால நலனுக்கு செலவிட எந்த நடிகரும் முன்வரவில்லையா? அல்லது அவ்வளவு ஏழையாக நடிகர் சங்கம் மாறிவிட்டதா? என்று தெரியவில்லை. சரத்குமார் எதையும் விட்டுச் செல்லவில்லை என்று கூறிய விஷால் தற்போது நடிகர் சங்கத்தில் இருப்புத்தொகை 48 லட்சம் இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மக்களின் பிரச்சினைக்கு
முன்பு ஒரு பிரச்சினையின் போது நாங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மாட்டோம். அது அரசின் வேலை என்று நடிகர்கள் கூறியிருந்தனர். குறிப்பாக விஷாலும், நாசரும் அவ்வாறு கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இவர்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டும் மக்களிடம் வந்து நிற்பது ஏன்? எங்களுக்கு கட்டிடம் கட்ட உதவி செய்யுங்கள் என்று அரசிடம் போய் கேட்க வேண்டியது தானே?

சரத்குமார் ஒருவரிடம்
இதனைக் கேள்விப்படும் ரசிகர்கள் "நடிகர் சரத்குமார் நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட எஸ்பிஐ சினிமாஸ் என்ற பெரும் நிறுவனத்துடன் மட்டும்தான் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால் விஷால் கிரிக்கெட் போட்டி நடத்தி மக்களிடம் வசூலிக்க நினைப்பது சரியா?" என்று கேள்வி எழுப்புகின்றனர். நியாயமான கேள்விதான்.

சிசிஎல்
ஏற்கனவே சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று அனைத்து மாநிலங்களிடமும் உதைபட்டு நம்மவர்கள் வெளியேறிய நிகழ்வே இவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டதே. அப்புறம் எதற்கு கிரிக்கெட் என்ற விஷப் பரீட்சையை மீண்டும் விஷால் கையில் எடுக்கிறார் என்று தெரியவில்லை.

மக்களா வந்து
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி அதில் என்ன மக்களா வந்து குடியேறப் போகிறார்கள். இல்லை அதனால் மக்களுக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா? ஒருபயனும் மக்களுக்கு இதனால் விளையப்போவதில்லை.


Click it and Unblock the Notifications











