2016 சட்டமன்றத் தேர்தல்: நடிகர் சங்கமும் களத்தில் குதிக்கிறதா?
சென்னை: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர்களின் பங்களிப்பையும் தேர்தல் ஆணையம் விரும்புவதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்திருக்கிறார்.
2016 ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.தேர்தல் காலங்களில் 3 மாத காலம் நாடக நடிகர்கள் தங்களது தொழிலை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதனால் நாடக நடிகர்களின் துயரங்களைக் கணக்கில் கொண்டு நடிகர் சங்கத்தினர் தேர்தல் ஆணையரை சந்தித்துப் பேசியுள்ளனர். அதற்கு தேர்தல் ஆணையர் நாங்கள் அப்படி ஒன்றும் தடை விதிக்கவில்லை.
இதுகுறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் பேசுகிறோம் என்று கூறினாராம். மேலும் தேர்தல் காலங்களில் மக்களிடம் தேர்தலில் பங்கெடுக்க பரப்புரைகளை நிகழ்த்த வேண்டும்.
நாங்கள் எவ்வளவு சொன்னாலும் நடிகர்கள் சொல்வது போல அது வருவதில்லை. நீங்கள் தேர்தல் தொடர்பான அறிவுரைகளை வழங்கும்போது அது மக்களிடம் வேகமாக சென்று சேருகிறது.
எனவே நீங்கள் எங்களுக்காக இதனை செய்துதர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதாம். தேர்தல் ஆணையத்தின் இந்த கோரிக்கையை நடிகர் சங்கமும் ஏற்றுக் கொண்டு விட்டதாம்.
"நடிகர்களாக எங்களுடைய வேலையை மட்டும் செய்துகொண்டிருப்பதற்கு மத்தியில், மக்கள் பணியாற்றக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வோம்" என்று நடிகர் பொன்வண்ணன் இதுகுறித்து தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











