அடிதடி, தள்ளுமுள்ளு, வாக்குவாதம், தடியடிக்கு மத்தியில் நடந்து முடிந்த நடிகர் சங்க பொதுக்குழு!
சென்னை: அடிதடி, தள்ளுமுள்ளு, வாக்குவாதம், தடியடிக்கு மத்தியில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் ஒரு வழியாக நடந்து முடிந்தது.
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே இன்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. சங்க தலைவர் நாசர் தலைமையில் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆயிரக் கணக்கான நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும், அடுத்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் மூத்த கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் பொதுக் குழு கூட்டம் தொடங்கியபோது திடீரென கூட்டம் நடந்த மைதானத்தின் வாயிலில் திடீர் என தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உறுப்பினர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சங்க உறுப்பினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. உறுப்பினர் அடையாள அட்டை இல்லாத யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதையும் மீறி சிலர் உள்ளே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னல் லேசான தடியடியுடன் நிலைமையை போலீஸார் சமாளித்தனர்.
இந்தக் கலாட்டாவைப் பொருட்படுத்தாமல் பொதுக்குழுக் கூட்டம் தொடர்ந்து நடந்தது. மாலை 5. 30 மணிக்கு கூட்டம் நடந்து முடிந்தது.


Click it and Unblock the Notifications











