சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும்:தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை
சென்னை: சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை மோசமானதால் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கவலைக்கிடம்
செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 51 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சில நாட்களுக்கு முன் மோசமானது. கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன் தினம் காலமானார்.

பண்ணை வீட்டில்
அவர் உடல், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அரசு
மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்.பி.பி பெயரில் வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈடு செய்ய முடியாத
இதுபற்றி தயாரிப்பாளர் கேயார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.பி.பி-யின் மறைவைக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னைப் பாதித்துள்ளது. அவர் மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

சாகாவரம் பெற்ற
ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில், இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார்.

எஸ்பிபி பெயரில் விருது
எஸ்பிபியின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட. இவ்வாறு கேயார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











