மஞ்சள் நிற சேலையில் நயன்தாரா.. மங்களகரமாக திருப்பதியில் கணவர் விக்னேஷ் சிவன் உடன் சாமி தரிசனம்!
சென்னை: மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக திருப்பதியில் ஏழுமலையானை வழிபாடு செய்துள்ளார் நடிகை நயன்தாரா.
Recommended Video
மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நேற்று திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை திருப்பதிக்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பிரம்மாண்ட திருமணம்
தமிழ் திரையுலகிலேயே இதுவரை நடைபெற்ற திருமணங்களை விட படு பிரம்மாண்டமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் படு செக்யூரிட்டி பாதுகாப்புடன் இந்த திருமணம் நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. 21 புரோகிதர்கள் இந்த திருமணத்தை இந்து முறைப்படி நடத்தி வைத்தனர்.

ரஜினி முதல் சூர்யா வரை
நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, சூர்யா, அஜித் மனைவி ஷாலினி மற்றும் அவரது குடும்பம் என ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்றனர். இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஹரி, சிறுத்தை சிவா என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களின் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் எந்தவொரு புகைப்படமும் அதிகாரப்பூர்வமாக விக்னேஷ் சிவன் வெளியிடாத வரை லீக் ஆகவில்லை.

திருப்பதியில் நயன்தாரா
திருப்பதியில் தான் ஜூன் 9ம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில கட்டுப்பாடுகள் காரணமாக கடைசி நேரத்தில் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு திருமணத்தை மாற்றி விட்டனர். இந்நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்கு சென்று நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்.

மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக
நேற்று திருமணத்தின் போது சிகப்பு நிற உடையில் ரோஜாக்கூட்டமே நடந்து வருவது போல மணமேடைக்கு நடந்து வந்து மணமேடையை அலங்கரித்த நயன்தாரா, தற்போது திருப்பதிக்கு மஞ்சள் நிற சேலை அணிந்து மங்களகரமாக கணவர் விக்னேஷ் சிவன் உடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

பட்டு வேட்டி சட்டையில்
திருமணத்தில் அணிந்திருந்ததை போலவே இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்றும் பட்டு வேட்டி சட்டையில் தனது மனைவி நயன்தாராவுடன் ஜோடி போட்டு சாமி தரிசனத்துக்காக விஐபி வரிசையில் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.

ஹனிமூன் இல்லையா
கடந்த 7 ஆண்டுகளாக ஏகப்பட்ட வெளிநாடுகளுக்கு சென்று டேட்டிங் மற்றும் சம்மர் விடுமுறைகளை கொண்டாடி வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு எங்கே ஹனிமூன் செல்லப் போகின்றனர் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஆனால், இருவருமே திரைப்படங்களில் அடுத்தடுத்து பிசியாகி உள்ள நிலையில், ஹனிமூனுக்கு எங்கேயும் செல்லப் போவதில்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











