கடவுள் இருக்கான் குமாருக்கு தடை இல்லை, எல்லாம் சதி: தயாரிப்பாளர் சிவா
சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பொய்யான தகவலை சிலர் வேண்டும் என்றே பரப்பியுள்ளதாக தயாரிப்பாளர் டி. சிவா தெரிவித்துள்ளார்.
அம்மா கிரியேன்ஸ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் வேறு ஒரு பட வெளியீட்டின்போது ஏற்பட்ட நஷ்ட விவகாரம் தொடர்பாக இரு வினியோகஸ்தர்களுக்கிடையிலான பிரச்சினையை முன் வைத்து, கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டன.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா ஒன்இந்தியாவிடம் கூறுகையில், "வழக்கு விசாரணையே நாளைதான் நடைபெற உள்ளது. ஆனால் படத்தை முடக்க சிலர் பொய்யான செய்திகளை மீடியாக்கள் மூலம் பரப்புகிறார்கள். அவர்களின் கனவு நனவாகாது... இரு விநியோகஸ்தர்களுக்கான தகராறில் ஒரு தயாரிப்பாளரின் படத்தை முடக்க நினைப்பது எத்தனைப் பெரிய தவறு? திட்டமிட்டபடி நாளை மறுநாள் படம் வெளியாகும்," என்றார்.


Click it and Unblock the Notifications











