'தியேட்டர்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை, திருமண மண்டபங்களில் படத்தை ஓட்டுவோம்!'
இனி வெளியாகவிருக்கும் பெரிய படங்களை திருமண மண்டபங்களில் கூட ஓட்டிக் கொள்வோம். ஆனால் தியேட்டர்கள் தேவையில்லை என்று தயாரிப்பாளர் சங்க செயலர் டி சிவா தெரிவித்தார்.
விஜய் நடிப்பில் உருவான தெறி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு பகுதியில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். சில அரங்குகள் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தெறி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், "தெறி படம் செங்கல்பட்டு பகுதியில் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் செங்கல்பட்டு பகுதிக்கு ரிரீஸ் செய்ய கொடுத்திருந்தோம். அவர்களும் சரியான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அப்படியிருந்தும் சுமார் 75 சதவீத தியேட்டர்களில் (சுமார் 60 தியேட்டர்கள்) படம் வெளியாகவில்லை. விநியோகஸ்தர்கள் எதையோ எதிர்பார்த்து இப்படி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே செங்கல்பட்டு பகுதியில் பிரச்சனை இருந்தது. இப்போது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்துவிட்டனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது," என்றார்.
செயலாளர் சிவா கூறுகையில், "படம் ரிலீசாவதே கடினமாக உள்ள இந்த சூழ்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வரும் காலங்களில் வரக்கூடிய பெரிய படங்கள் இந்த தியேட்டர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. ஒரு படம் ஓடவில்லை என்றால் இழப்பின் வலி எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் தெரியவேண்டும்.
ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்கும் வகையில், கபாலி, 24 போன்ற பெரிய படங்களை அப்பகுதியில் உள்ள மண்டபங்களில் ஸ்கிரீன் போட்டு, உரிய அனுமதியுடன் படத்தை ஓட்ட ஏற்பாடு செய்தாலும் செய்வோமே தவிர இனி இத்தகைய தியேட்டர்களுக்குப் படம் கொடுக்க மாட்டோம்," என்றார்.
தாணுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கத் தலைவர் நாசரும் இந்த சந்திப்பில் பங்கேற்றார்.


Click it and Unblock the Notifications











