ஶ்ரீவித்யா வீட்டை ஏலத்தில் வாங்க ஆள் இல்லை.. ஏலம் தள்ளிவைப்பு!
Recommended Video

சென்னை : மறைந்த நடிகை ஸ்ரீவித்யா, தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 2006-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
ஶ்ரீவித்யா வருமான வரித்துறைக்கு ரூ.45 லட்சம் பாக்கி வைத்திருந்ததால் அவரது அபிராமபுரம் வீட்டை வருமான வரித்துறை தன் பொறுப்பில் வைத்திருந்தது.
இந்நிலையில், அந்த வீடு ஏலத்தில் விடப்படுவதாக சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், அந்த வீட்டை ஏலத்தில் வாங்க யாரும் முன்வராததால் ஏலம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீவித்யா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீவித்யா. இவர் சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 2006-ல் உயிரிழந்தார்.

ஶ்ரீவித்யா வீடு
ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. 1250 சதுர அடிகளை கொண்ட 3 அறைகள் அடங்கிய வீடு அது. தற்போது அதில் வேறொருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். வீட்டை ஸ்ரீவித்யாவின் தம்பி நிர்வகித்து வருகிறார்.

வருமான வரித்துறை கட்டுப்பாட்டில்
ஸ்ரீவித்யா 45 லட்சம் ரூபாய் வருமானவரி பாக்கி வைத்திருந்தார். இதற்காக அபிராமபுரம் வீட்டை வருமானவரித்துறை தன் பொறுப்பில் வைத்திருந்தது. வாடகைக்கு குடியிருக்கும் ஐகோர்ட் வக்கீல் ஒருவர் வருமானவரித்துறையிடம் வாடகைப் பணத்தைச் செலுத்தி வந்தார்.

ஏலத்தில் விட முடிவு
இந்த நிலையில் வருமான வரித்துறைக்கு செலுத்தவேண்டிய பாக்கிக்காக வீட்டை ஏலத்தில் விட வருமானவரித்துறை முடிவு செய்தது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக ஒரு கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் என நிர்ணயம் செய்தது. ஏல அறிவிப்பை தொடர்ந்து பலர் ஸ்ரீவித்யாவின் வீட்டைப் பார்த்துச் சென்றனர். திட்டமிட்டபடி நேற்று ஏலம் விட இருந்தனர்.

ஏலம் தள்ளிவைப்பு
ஆனால் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏலம் விடுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமையான வீட்டுக்கு ஒரு கோடியே 17 லட்சம் என்பது கூடுதலான தொகை என்று வீட்டைப் பார்த்துச் சென்றவர்கள் கூறியிருக்கிறார்கள். குறைந்தபட்ச ஏலத்தொகையை குறைத்து மீண்டும் ஏலம் விடப்படும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











