பசங்க 2 இசையமைப்பாளருக்கு சூர்யா வழங்கிய அசத்தல் பரிசு
சென்னை: பசங்க 2 வின் வெற்றியால் அப்படத்தின் இசையமைப்பாளர் அரோல் கெரோலிக்கு தங்கச் சங்கிலி ஒன்றை நடிகர் சூர்யா பரிசாக வழங்கி இருக்கிறார்.
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து வெளியிட்ட பசங்க 2 திரைப்படம் 2015ன் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது.
மேலும் விமர்சகர்கள், ரசிகர்களாலும் இந்தப் படம் பெரிதும் பாராட்டப்பட்டது. குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் வசூலில் இப்படம் எந்தக் குறையும் வைக்கவில்லை.

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நடிகர் சூர்யாவிற்கு பசங்க 2 வெற்றி புத்துனர்ச்சியை அளித்திருக்கிறது. இதனால் அப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தொடர்ந்து பரிசுகளை சூர்யா வழங்கி வருகிறார்.
ஏற்கனவே இயக்குநர் பாண்டிராஜ்க்கு கார் ஒன்றினை பரிசாக வழங்கியிருந்த சூர்யா தற்போது படத்தின் இசையமைப்பாளர் அரோல் கெரோலிக்கு தங்கச் சங்கிலி ஒன்றை பரிசளித்துள்ளார்.
இசையமைப்பாளர் அரோல் கெரோலி இது குறித்து "சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரைப் பார்க்க சென்றபோது என்னைப் பாராட்டி தங்கச்சங்கிலி ஒன்றை கழுத்தில் அணிவித்தார்.
தொடர்ந்து நாம் இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் என்னை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் மிஷ்கின் அவர்களும் பசங்க 2 படத்தின் இசையைப் பாராட்டினார்" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் எஸ் 3 படப்பிடிப்பிற்காக சூர்யா தற்போது விசாகப்பட்டினம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











