சேலத்தில் டிவி நடிகை திறந்து வைத்த நகைக்கடையை மக்கள் சூறை
சேலம்: டிவி நடிகை ப்ரியங்கா திறந்து வைத்த நகைக்கடையை மக்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர், சதுரங்காடியில் ஜெயம் ஜுவல்லரி என்ற நகைக் கடையை டிவி நடிகை ப்ரியங்கா திறந்து வைத்தார். இந்த கடையில் பணம் டெபாசிட் செய்தால் ஒரு மாதம் கழித்து குறைந்த விலையில் தங்கக் காசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.
அதை பார்த்து பலரும் தங்கக் காசு வாங்கும் ஆசையில் பணத்தை டெபாசிட் செய்தனர்.

தங்கக் காசு
300க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயை அந்த கடையில் டெபாசிட் செய்துள்ளனர். பணம் டெபாசிட் செய்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் தங்கக் காசுகளை கொடுத்துவிட்டு மற்றவர்களை அலைய வைத்துள்ளனர் அந்த கடைக்காரர்கள்.

முற்றுகை
பொறுத்து பொறுத்த பார்த்த வாடிக்கையாளர்கள் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி கடையை முற்றுகையிட்டு பணத்தை கொடு இல்லை என்றால் தங்கக் காசு கொடு என்று கேட்டனர். அப்போது கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையை தற்காலிகமாக மூடினார்கள்.

கடை திறப்பு
மூன்று நாட்களில் பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று தெரிவித்து கடையை திறந்தனர். பணத்தை வாங்கும் ஆவலில் கடைக்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்நிலையில் கடையின் உரிமையாளர்கள் முக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட்டு சென்றனர்.

போலீஸ்
உரிமையாளர்கள் தப்பியோடிவிட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள் கடையில் இருந்த ஏசி, நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பொதுமக்கள் கடையை சூறையாடிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











