தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து கன்னடத்திற்கு செல்லும் 'பிச்சைக்காரன்'
பெங்களூர்: தமிழில் ஹிட் தெலுங்கில் மெகா ஹிட்டடித்த 'பிச்சைக்காரன்' அடுத்ததாக கன்னடத்தில் ரீமேக்காக உள்ளது.
விஜய் ஆண்டனி- சாதனா டைட்டஸ் நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' தமிழில் 15 கோடிகள் வரை வசூல் செய்தது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படத்தை 'பிச்சக்காடு' என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர்.

வெறும் 50 லட்சங்களுக்கு விலை போன இப்படம் அங்கு 25 கோடிகள் வரை வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. இந்நிலையில் கன்னடத்தில் இப்படத்தை ரீமேக் செய்யப் போவதாக கூறுகின்றனர்.
இப்படத்தின் கன்னட உரிமையை யோகேஷ் துவாரகேஷ் என்பவர் கைப்பற்றியிருக்கிறார். இதில் நாயகனாக கிருஷ்ணா அஜய் ராவ் நடிக்கிறார். இதுகுறித்து அஜய் '' சமீபத்தில் இப்படத்தை பார்த்தேன்.
இதை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டேன். ஆனால் ஏற்கனவே இப்படத்தின் கன்னட உரிமையை யோகேஷ் துவாரகேஷ் கைப்பற்றியிருந்தார்.
இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று அவரிடம் கூறியபோது சுதீப்பிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார். ஆனால் அதிர்ஷ்டம் என் பக்கமிருந்தது.
யோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு இப்படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது'' என்று தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கைத் தொடர்ந்து கன்னடத்திலும் இப்படம் ரீமேக் ஆவதால் விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களின் மதிப்பு, தங்கவிலை போல நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


Click it and Unblock the Notifications











