Ponniyin Selvan Box Office Prediction: முதல் நாளே உலகளவில் 100 கோடி வசூலை தொடுமா பொன்னியின் செல்வன்?
சென்னை: இதுவரை எந்தவொரு தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு எழுந்துள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
பாகுபலி 2ம் பாகத்திற்கு படையெடுத்து வந்ததை போல மக்கள் இந்த முறை வருகின்றனர் என்றும், விக்ரம், கேஜிஎஃப் 2வுக்கு வந்ததை விட இரண்டு மடங்கு அதிக கூட்டம் என வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் கெளதமன் தெரிவித்துள்ளார்.
முதல் நாளிலேயே பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை எட்டுமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிரம்மாண்ட காவியம்
கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை, எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படமாக எடுக்க முயன்று முடியாத நிலையில், இயக்குநர் மணிரத்னம் அதனை சாதித்துள்ளார். சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், பிரபு, விக்ரம் பிரபு, அஸ்வின் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு வாரத்துக்கு புக்கிங்
ஒரு வாரத்துக்கு டிக்கெட் பலருக்கும் கிடைக்காத அளவுக்கு பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட் புக்கிங் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் எல்லாம் புக்கிங் ஓப்பனான உடனே சோல்ட் அவுட் ஆகி விட்டது. சின்ன தியேட்டர் முதல் பெரிய தியேட்டர்கள் வரை டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்
இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பொன்னியின் செல்வன் படத்துக்கான டிக்கெட் புக்கிங் சூடு பறக்கிறது. அமெரிக்காவில் கபாலி படத்திற்கு பிறகு அதிகளவிலான டிக்கெட்டுகள் பொன்னியின் செல்வன் படத்துக்குத்தான் விற்றுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் வசூல் 25 கோடி முதல் 30 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 கோடி வருமா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா மொழி படமாக பொன்னியின் செல்வன் உருவாகி உள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து மாநிலங்களுக்கும் சென்று படக்குழுவினர் பெரிய அளவில் புரமோஷனும் செய்துள்ளனர். முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடி பொன்னியின் செல்வன் தொடுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 70 முதல் 80 கோடி வரை கன்ஃபார்ம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமர்சனத்தின் கையில்
நானே வருவேன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது பொன்னியின் செல்வனுக்கு கூடுதல் மைலேஜ் தான். ஆனால், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கொடுக்கப்போகும் விமர்சனத்தில் தான் படத்தின் வசூல் அதிகரிக்குமா? அல்லது தொய்வை சந்திக்குமா? என்பது உள்ளது.

நம்பிக்கை இருக்கு
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் கதை ரசிகர்களை நிச்சயம் வியக்க வைக்கும். மேலும், முன்னணி நடிகர்களின் நடிப்பில் எந்தவொரு குறையும் இருக்காது. சிஜி உள்ளிட்ட விஷயங்களில் ரசிகர்களை படம் திருப்தி படுத்தினால் நிச்சயம் விக்ரம் படம் செய்த வசூல் சாதனையை விட மிகப்பெரிய வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் படைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ்பீரியன்ஸ்
அவதார், பாகுபலி போன்ற படங்களை ஒரு பெரிய எக்ஸ்பீரியன்ஸுக்காக பார்ப்பதை போலவே பொன்னியின் செல்வன் திரைப்படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழின் முதல் ஐமேக்ஸ் படமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











