மெல்ல ஓடத்தொடங்கி புலி பாய்ச்சல்..வேகம் காட்டிய பொன்னியின் செல்வன்..சாதித்த மணிரத்னம் டீம்
பொன்னியின் செல்வன் ஆரம்பித்தபோது அதன் எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் என்ன செய்யவேண்டுமோ அதை செய்தார்கள்.
கொரோனாவின் கொடிய காலக்கட்டத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புகள் கடுமையான பிரச்சினைகள் இடையே நடந்தன.
விளம்பரம் செய்வதில் பெரிய அளவில் இல்லாமல் சாதாரணமாக தொடங்கிய டீசர் விழா பின்னர் சிறிது சிறிதாக பாய்ச்சல் காட்டி புலி வேகத்தில் பாய்ச்சல் காட்டியுள்ளது பொன்னியின் செல்வன் படக்குழு.

68 ஆண்டுகள் பலரது கனவு பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு இப்போதல்ல 68 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருந்து வந்துள்ளது. அது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அல்ல, திரையுலகின் ஜாம்பவான்களின் எண்ணமாகவும் பொன்னியின் செல்வன் இருந்துள்ளது. அதனால்தான் அதை பலரும் முயற்சி செய்தனர். ஆனால் காலமும் சூழ்நிலையும் ஒத்துழைக்க வேண்டுமே.

மணிரத்னம் எனும் தனி மனிதர்
பொன்னியின் செல்வன் படம் திரைப்படமாக உருமாற்றம் அடைய தொடங்கியது மணிரத்னம் எனும் தனி மனிதரால். அவரால் சாத்தியமானதை இயற்கை வெல்ல முயன்றது. கொரோனா எனும் பேரிடர் படத்துக்கு இடராக வந்தது. அதையும் மீறி பலவித சிக்கல்களை தாண்டி 150 நாட்களுக்குள் 2 பாகத்தையும் எடுத்து முடித்தார்.

முதலில் மெதுவாக தொடங்கிய பயணம்
பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டபோது முதலில் நடந்த நிகழ்ச்சி ஏனோ தானோவென்று இருந்தது. அண்ணாச்சியின் லெஜண்ட் பட ப்ரமோஷன் கூட அள்ளியது. இது ஏன் இப்படி படத்தில் ஒன்றும் இல்லையா என்றெல்லாம் சினிமா வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பேச்சு எழுந்தது. படத்தில் நடித்த விக்ரம் வரவில்லை, ஐஸ்வர்யா வரவில்லை, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.

தட்டி தூக்கிய ட்ரெய்லர் நிகழ்ச்சி
ஆனால் அதையெல்லாம் தூக்கி அடித்தது ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி. முதலில் சொதப்பலாக தொடங்கியதாக எழுந்த விமர்சனம் அது சொதப்பல் அல்ல பதுங்கல், பின்னர் பாய்வதற்கு என அடுத்தடுத்த நிக்ழ்ச்சிகள் நிரூபித்தன. ட்ரெய்லர் நிகழ்ச்சியில் ரஜினி, கமல் ஐஸ்வர்யா என பலரும் கலந்துக்கொண்டு அசத்தினர். ரஜினிகாந்தின் பேச்சு ஊடகங்களில் பேசுபொருளானது. அதற்கு அடுத்து படக்குழுவினர் காட்டிய பாய்ச்சல் வேகம் பிரம்மிக்கதக்கது.

புலிப்பாய்ச்சல், புல்லட் ரெயில் வேகம்..சாதித்த படக்குழு
இந்தியா முழுவதும் படக்குழுவினருடன் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயணம் செய்து படம் குறித்த பேச்சை உருவாக்கினர், கடைசி பத்து நாட்கள் பொன்னியின் செல்வன் குறித்தே பேச்சு எழுந்தது. புலி பாய்ந்தது, ஆனால் இலக்கை தாக்கியதா என்று பலரும் கேட்டனர். இவ்வளவு பில்டப் இருக்கு அதற்கு ஏற்ப படம் இருக்குமா என்று கேட்டனர். ஆனால் அதையும் சாதித்து காட்டியுள்ளது படக்குழு, படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது. புலி பாய்ந்து இலக்கையும் தாக்கிவிட்டது.மெல்ல ஆரம்பித்து ஒரு புல்லட் ரெயில் வேகத்தில் பயணிக்கிறது பொன்னியின் செல்வன்.


Click it and Unblock the Notifications











