சென்னை வெள்ள நிவாரணம்: நடிகர் பிரபாஸ் ரூ 15 லட்சம் நன்கொடை அறிவிப்பு
ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ரூ 15 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும் நடிகர் நவ்தீப்பிடம் மேலும் உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவிகள் வழங்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ரவி தேஜா மற்றும் வருண் ஆகியோர் தங்களால் இயன்ற உதவிகளை அளிக்க முன்வந்திருக்கும் நிலையில், நடிகர் பிரபாஸும் இந்தப் பட்டியலில் இணைந்து கொண்டிருக்கிறார்.
பிரபாஸ்
பாகுபலி நாயகன் என்று அறியப்படும் பிரபாஸ் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு ரூ 15 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார். தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு இந்தத் தொகையை வழங்குவதாக பிரபாஸ் அறிவித்திருக்கிறார்.
நவ்தீப்
மேலும் அறிந்தும் அறியாமலும் நாயகன் நவ்தீப்பை கூப்பிட்டுப்பேசி அவரிடம் தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை விரிவுபடுத்த வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் நவ்தீப்பிடம் அதற்கான பண உதவிகளை தான் வழங்குவதாகவும் பிரபாஸ் கூறியிருக்கிறார்.
சென்னை மக்களுக்கு உதவி
வெள்ளத்தால் பாதிக்கபட்ட சென்னை மக்களுக்கு உதவ நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு விரைவில் ஒரு டிரக் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதாக நவ்தீப் தெரிவித்திருக்கிறார்.
கடலூர் நிலை என்ன?
கடலூர் மாவட்டத்தின் தற்போதைய நிலையை யாராவது கூறினால், அங்கும் ஒரு டிரக்கில் தேவையான பொருட்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதாகவும் நவ்தீப் உறுதி தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











