சம்பளத்தை ஒரேடியாக இரண்டு மடங்கு உயர்த்திய லவ் டுடே ஹீரோ... அடிச்சான் பாரு பம்பர் ஜாக்பாட்
சென்னை: ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
அதனைத் தொடர்ந்து அவர் இயக்கி ஹீரோவாக அறிமுகமான லவ் டுடே கடந்த நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
2கே கிட்ஸ்களை குறிவைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப் படம் குறித்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய லவ் டுடே
2022ம் ஆண்டு பெரிய பட்ஜெட்டில் உருவான சில திரைப்படங்கள் கூட வசூலில் தடுமாறிய நிலையில், லவ் டுடே பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரித்த இந்தப் படம் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் உருவானதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் 90 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதேபோல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வசூலில் சாதனை படைத்தது. 2கே கிட்ஸ்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடிய இந்தப் படம், இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இரண்டு மடங்கு சம்பளம்
கோமாளி, லவ் டுடே என பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல் வசூலிலும் கோமாளி 50 கோடிகளுக்கு மேல் கலெக்ஷன் செய்தது. லவ் டுடே 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இதனால் அடுத்த படத்திற்கு தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளாராம் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்திற்காக 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதன்படி தனது அடுத்த படத்துக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டுள்ளாராம்.

ரஜினியுடன் கூட்டணி?
லவ் டுடே படத்தின் சக்சஸ் மீட்டில் பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், விஜய்யிடம் ஒரு கதை கூறியிருப்பதாகவும், விரைவில் அது படமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதேநேரம் லவ் டுடே வெற்றியை பெற்றதும் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார் ரஜினிகாந்த். அப்போது அவருக்கு பிரதீப் ஒரு கதை சொன்னதாகவும், அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரனிடம் கதை சொல்வதற்காக லண்டன் சென்றாராம் பிரதீப்.

விரைவில் அறிவிப்பு
ரஜினியும் பிரதீப் படம் விஷயம் தொடர்பாக சுபாஸ்கரனிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்தக் கூட்டணி அமைவது உறுதி என்றும், சீக்கிரமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது. இன்னொரு பக்கம் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திலும் பிரதீப்பே ஹீரோவாக நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. லவ் டுடே வெற்றியால் பிரதீப் ரங்கநாதனுக்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் வலை வீசி வருவதால், விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பிரதீப் ரங்கநாதனும் தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திவிட்டதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











