வக்கீல் வைக்க பெர்மிஷன்கேட்கும் பிரஷாந்த் மனைவி
குடும்ப நல நீதிமன்றத்தில் தனது வழக்கில் வக்கீல் வைத்து வாதாட அனுமதி தர வேண்டும் என செனனை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு பிரஷாந்திற்கும், கிரகலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்குச் சென்ற கிரகலட்சுமி மீண்டும் பிரஷாந்த் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பிரஷாந்த். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை வரதட்சணை கொடுமை செய்வதாக கிரகலட்சுமி திடீரென போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில், பிரஷாந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிரஷாந்த், அவரது தந்தை தியாகராஜன், தாயார் சாந்தி, தங்கை ப்ரீத்தி ஆகியோர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றனர்.
இந்த நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் வருகிற 18ம் தேதிக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தில் கிரகலட்சுமி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் வக்கீல் வைத்து வாதாட தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கிரகலட்சுமி கோரியுள்ளார். மேலும், கணவருடன் சேர்ந்து வாழ தயாராக இருப்பதாகவும், அவருடன் சேர்த்து வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கிரகலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











