அடக்கி வைத்திருந்த ஆத்திரம்.. எரிமலையாய் வெடிக்குது.. ஈரானிய பெண்களுக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஈரானிய பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை அளித்து பதிவிட்டுள்ள கருத்து சோஷியல் மீடியாவில் பற்றி எரிகிறது.
ஹிஜாப் சரியாக அணியாததால் மஹ்சா அமினி எனும் இளம் பெண் ஈரானில் போலீஸ்காரர்களின் சித்தரவதையால் கோமாவுக்கு சென்று உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.
மஹ்சா அமினியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஈரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ள நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் சரியாக அணியாததால்
ஈரானில் பெண்களுக்கு எதிரான விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மஹ்சா அமினி எனும் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் ரயிலில் வந்து இறங்கிய போது அவரது ஹிஜாப் சரியாக அணிந்திருக்கவில்லை என்கிற குற்றத்திற்காக ஈரானிய போலீஸாரால் கடந்த செப்டம்பர் 13ம் தேதி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது.

அடித்தே கொன்றுவிட்டனர்
தன்னை கைது செய்த போலீஸாரிடம் எதிர்த்து கேள்விக் கேட்ட அந்த இளம் பெண்ணை போலீஸார் பலமாக தலையில் தாக்கிய நிலையில், அவர் 3 நாட்கள் கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியானதும் ஈரானிய பெண்கள் கொதித்தெழுந்தனர். போலீஸார் அடித்தே கொன்று விட்டனர் மஹ்சாவை என பெரிய போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

போராட்டத்தில் நடிகைகள்
ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக பிரெஞ்சு நடிகைகளான ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் உள்ளிட்ட பிரபல நடிகைகள் தங்கள் தலைமுடியை வெட்டிக் கொண்டு ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா ஆதரவு
ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக ஒரு பெண் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாள் என்பது வேதனைக்குரியது மட்டுமில்லை வெட்கக் கேடானது. அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என பெண்கள் வீதியில் இறங்கி, மொட்டை அடித்தும், முடியை வெட்டியும் மேலும், பலவித நூதன போராட்டங்களையும் ஆதிக்க சக்திக்கு எதிராக செய்து வருவதை பார்க்க நேரிட்டது. ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவும் உள்ளது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எரிமலையாக வெடித்துள்ளனர்
பல நாட்களாக அடக்கி வைக்கப்பட்ட ஆத்திரத்தை தற்போது ஈரானிய பெண்கள் எரிமலையை வெடித்து தள்ளி வருகின்றனர். அதனை யாராலும் தடுக்க முடியாது. மஹ்சாவுக்கு மட்டுமின்றி உலகளவில் வாழும் அனைத்து பெண்களுக்கு தான் என்ன ஆடையை உடுத்த வேண்டும் என்கிற சுதந்திரத்தை வழங்க வேண்டியது முக்கியமான கடமை என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











