பாகுபலிக்காக பந்த் வேணுமாம்: கிளம்பிட்டாருய்யா வாட்டாளு நாகராஜ்
பெங்களூர்: கர்நாடகாவில் பாகுபலி 2 படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி படம் வெளியாகும் நாள் அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
ராஜமவுலியின் பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. கட்டப்பாவாக நடித்துள்ள சத்யராஜ் காவிரி நீர் பிரச்சனையின்போது கன்னடர்களை அவதூறாக பேசியதாகக் கூறி ஒரு வீடியோ வைரலானது.

கன்னடர்களை தவறாக பேசியதற்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்நிலையில் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் படம் ரிலீஸாகும் அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு 2 ஆயிரம் கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவிள்ளதாக நாகராஜ் கூறியுள்ளார்.
நாகராஜ் மேலும் கூறுகையில்,
சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும். பாகுபலி 2 படத்தை திரையிட வேண்டாம் என தியேட்டர் உரிமையாளர்களை கேட்டுக் கொள்கிறோம். படத்தை கர்நாடகாவுக்கு கொண்டு வர வேண்டாம் என வினியோகஸ்தர்களை கேட்டுள்ளோம். நாங்கள் படத்திற்கு எதிராக இல்லை. இந்த விஷயத்தில் மாநில அரசு தலையிட்டு படத்தை திரையிட விடாமல் செய்ய வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











