தலைவி படத்திற்கு 5 தேசிய விருதுகள் கன்ஃபார்ம்... அடித்துச் சொல்லும் தயாரிப்பாளர்
ஐதராபாத் : டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி நடித்துள்ள தலைவி படம் செப்டம்பர் 10 ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும், எம்ஜிஆர் ரோலில் அரவிந்த் சாமியும், சசிகலா ரோலில் பூர்ணாவும் நடித்துள்ளனர்.
மார்ச் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய தலைவி படம் தமிழக சட்டசபை தேர்தல், கொரோனா, லாக்டவுன், தியேட்டர்கள் மூடல் உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளி போனது. ஆனால் தியேட்டர் ரிலீஸ் என்பதை உறுதி செய்த படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி
தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ள தலைவி படத்தின் ரிலீசை முன்னிட்டு கங்கனா, சென்னையில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு 2 நாட்களுக்கு முன் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதிலும் ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து வணங்கிய கங்கனாவின் ஃபோட்டோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகின.

இவர் தான் ஐடியா கொடுத்தது
இந்நிலையில் ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசிய தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி கூறுகையில், படத்தின் இணை தயாரிப்பாளரான பிருந்தா பிரசாத் தான் இந்த வாழ்க்கை பட ஐடியாவை கொடுத்தார். அதே போல் இந்த படத்தை இயக்க சரியான நபர் டைரக்டர் ஏ.எல்.விஜய் மட்டுமே என நினைத்தனர். யுனிவர்செல் பெயர் என்பதால் இந்த படத்திற்கு தலைவி என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். அது ஜெயலலிதாவின் இமேஜுக்கு சிறப்பானதாக இருக்கும்.

கங்கனா இவரின் சாய்ஸ்
ஜெயலலிதா ரோலில் கங்கனா நடித்தால் நன்றாக இருக்கும் என்ற ஐடியாவை கொடுத்தது திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் தான். கங்கனா இந்த படத்தில் நடித்தாலே இது பான் இந்தியா படமாகி விடும் என்றார். விஷால் விட்டலின் அற்புதமான விஷுவல்ஸ், ராமகிருஷ்ணாவின் ஆர்ட் டைரக்ஷன், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை ஆகியன இந்த படத்தை சிறப்பான படமாக உருவாக்கி உள்ளது என பேசினார்.

5 தேசிய விருதுகள்
மேலும் அவர் கூறுகையில், தலைவி படத்திற்கு குறைந்தபட்சம் 5 தேசிய விருதுகளாவது கிடைக்கும். ஒருவேளை சில குறைபாடுகளால் ஐந்துக்கும் குறைவான தேசிய விருதுகள் கிடைத்தால் அது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்றார் விஷ்ணுவர்தன்.

காத்திருக்கும் கங்கனா
இந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என கங்கனாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் படத்தின் ரிலீசுக்காக தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











